முதல்வர் எடப்பாடி, அமைச்சர் ஜெயக்குமாருக்கு 'தீந்தமிழன்' தினகரன் பேரவை எச்சரிக்கை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு டிடிவி தினகரனின் 'தீந்தமிழன் தினகரன் பேரவை' எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 'தீந்தமிழன் தினகரன்' பேரவை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச்செயலராக்கப்பட்ட தினகரன், தமது பெயரில் பேரவைகளை தொடங்கவும் அனுமதித்துள்ளார். தமிழகம் முழுவதும் 'தீந்தமிழன்' தினகரன் பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த பேரவையின் தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
பதவி விலகுக
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தினகரனுக்கு எதிராக பேசி வரும் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்,
எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா, தினகரன் ஆலோசனையில் ஆட்சி செய்வதாக அதிமுக தொண்டர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும்; இல்லையேல் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்,
எம்.எல்.ஏக்கள்
இரட்டை இலை முடக்க காரணமாக இருந்த ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.