"டைம் வேஸ்ட்" முடிவை எடுத்த தினகரன்.. அதிமுகவுக்கு நிம்மதி!
Recommended Video
சென்னை: 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று டிடிவி தினகரன் எடுத்துள்ள முடிவானது சுத்த டைம் வேஸ்ட் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். காரணம், இடைத் தேர்தலுக்கு நிர்ப்பந்தம் தராமல், பரபரப்பையும், அழுத்தத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் முடிவாக இது பார்க்கபப்டுகிறது.
அதிரடியான முடிவை எடுக்காமல், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தராத வகையிலான முடிவை தினகன் தரப்பு எடுத்திருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. சசிகலா தரப்பு ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்பட முயல்வதாக கூறப்படுவது உண்மைதானோ என்றும் எண்ண வைப்பதாக உள்ளது.
தினகரன் தரப்பு அப்பீலுக்குப் போகாமல் இருந்திருந்தால், இந்த 18 தொகுதிகள் மற்றும் மற்ற 2 தொகுதிகளுக்கும் சேர்த்து வருகிற பிப்ரவரிக்குள் அல்லது அதிகபட்சம் போனால் மே மாதத்திற்குள் இடைத் தேர்தல் வந்திருக்கும். ஆனால் தற்போது அது தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.
[தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு.. இடை தேர்தலிலும் போட்டி.. அதிரடி முடிவு ]
அப்பீல் முடிவு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 3வது நீதிபதியின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் தகுதி நீக்கம் செய்தது சரியே என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து ஆலோசனை நடத்திய தினகரன் தரப்பு தாங்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது இடைத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தோருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாதகங்கள் பல
தினகரன் தரப்பின் முடிவால் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அதாவது, இப்போதைக்கு இடைத் தேர்தல் இங்கு நடத்த முடியாது. காரணம், அப்பீல் போகும்போது தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தாது. அப்பீல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கு தேர்தல் நடத்த முடியாது. எனவே தொகுதிகள் காலியாகவே கிடக்கும்.
மக்களுக்கு பெரும் நஷ்டம்
ஏற்கனவே இந்த எம்எல்ஏக்களால் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே ஜெயலலிதா மறைந்து விட்டதால், அதன் பிறகு இந்த எம்எல்ஏக்கள் யாருமே தொகுதி மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. தொகுதிப் பக்கமும் போகவில்லை. கூவத்தூர், குடகு, புதுச்சேரி, குற்றாலம் என்றுதான் அலைந்த கொண்டுள்ளனர்.
அரசுக்கு இது சாதகமே
அதேசமயம், அரசுக்கு இது சாதகமான முடிவாகும். அதாவது இப்போதைக்கு இடைத் தேர்தல் நெருக்கடி கிடையாது. எனவே தேர்தல் பயமில்லாமல் ஆட்சியை நடத்தலாம். தீர்ப்பு வரும் வரை எந்தப் பிரச்சினையும் கிடையாது. இது நிச்சயம் அரசுக்கு சாதகமான சூழலாகும்.
கட்சிகள் இணையப் போகிறதா
அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு பேச்சு ஓடிக் கொண்டுள்ளது. அதாவது அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு பேச்சு உள்ளது. தினகரன் தரப்பை சேர்க்க அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அது மட்டும்தான் சிக்கலாக உள்ளதாம். மற்றபடி இரு தரப்பும் இணைய எந்தப் பிரச்சினையும் இல்லையாம். இந்த நிலையில்தான் தினகரன் தரப்பு எடுத்துள்ள இந்த முடிவை நாம் யோசித்துப் பார்க்க வேண்டி உள்ளது.
தைரியமான முடிவு இல்லையே
தினகரன் தரப்பு எடுத்துள்ள முடிவு நிச்சயம் தைரியமான முடிவு அல்ல, மாறாக காலம் கடத்தும் முடிவையே அவர்கள் எடுத்துள்ளனர். அதாவது அவர்களும் லைம் லைட்டில் இருக்கலாம். ஆட்சியும் போகாது, அதுவும் நீடிக்கும், இவர்களும் ரிலாக்ஸ்டாக இருக்கலாம். இதுதான் தினகரன் தரப்பு எடுத்துள்ள முடிவின் சாராம்சம். பாவம், இவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்கள்தான் பாவம். என்ன கொடுமை என்றால் இந்த 18 தொகுதிகளுக்கும் சேர்த்தே திருப்பரங்குன்றம், திருவார் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறப்போகிறது என்பதுதான்!
ஆமா, இந்த முடிவை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியது யாராக இருக்கும்??