அம்மா அதிமுக மார்ச் 1 ல் தொடங்கும் தினகரன் விட்டு விலகும் சசிகலா விசுவாசிகள்!
ஆர்கே நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் மார்ச் 1-ந் தேதி தனிக்கட்சி தொடங்குகிறாராம்.
Recommended Video
சென்னை: அம்மா அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சியை மார்ச் 1-ந் தேதி தினகரன் தொடங்க உள்ளார். அவரது இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா விசுவாசிகள் பலரும் அதிமுகவுக்கே திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
அண்ணா தி.மு.கவில் மீண்டும் கோலோச்சலாம் என்ற கனவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சசிகலா சொந்தங்கள். உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். ஜெயா டி.வியும் நமது எம்.ஜி.ஆரும் நம் கையில் இருக்கும்வரையில் தொண்டர்களை எடப்பாடி பழனிசாமியால் திசைதிருப்ப முடியாது. அங்கிருந்து சில அமைச்சர்கள் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் நம்மைத்தான் தேடி வருவார்கள்' எனப் பேசிக் கொண்டிருக்கின்றனர் அவர்கள். வெளிஉலகுக்கு அ.தி.மு.க துண்டாக சிதறியிருப்பது போலத் தெரிந்தாலும், ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கட்சி அதிகாரத்தை வழிநடத்தி வருகின்றனர். ' உள்ளாட்சித் தேர்தல் முடியும்போது, தினகரனிடம் இருப்பவர்களும் எடப்பாடி பக்கம் வந்துவிடுவார்கள்' என்ற பேச்சும் அமைச்சர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.
மார்ச் 1-ல் தினகரன் கட்சி
இந்நிலையில், வரும் மார்ச் 1-ம் தேதி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கிறார் தினகரன். புதிய கட்சிக்கு அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் என மூன்று பெயர்களை டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார் தினகரன்.
புதிய கட்சி பெயர் அம்மா அதிமுக
இந்தப் பெயர்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், அம்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரைப் பதிவு செய்ய இருக்கிறார் தினகரன். இதைப் பற்றி நம்மிடம் பேசும் சசிகலா சொந்தங்கள், சசிகலாவையும் அவரது குடும்பத்துக்கு ஆட்களையும் வனிதாமணியின் வாரிசுகள் முற்றாகப் புறக்கணித்து வருகின்றனர். தொடக்கத்தில் தினகரனுக்கு ஆதரவாக இருந்த திவாகரன் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார். அடுத்து என்ன செய்வது என அவருக்குத் தெரியவில்லை.
சசிகலா கணவர் எம்.என். எங்கே?
பா.ஜ.கவை எதிர்க்கும் ஒரே ஆள் நான் மட்டும்தான்' என்ற மனநிலையில் இருக்கிறார் தினகரன். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 'நான் இங்குதான் இருக்கிறேன்' என்பதைக் காட்டிக் கொள்ள வெளியில் வருகிறார் நடராஜன். தற்போதுள்ள சூழலில், எதையாவது செய்யப் போய், ' எடப்பாடி அரசின் கோபத்துக்கு ஆளாகிவிட வேண்டாம்' என ஓய்வெடுத்து வருகிறார் நடராஜன். அப்படியே புதிய கட்சி தொடங்கினாலும், 'ஜெயானந்த்தை தினகரன் முன்னிறுத்த வேண்டும்' எனவும் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இதற்கு தினகரன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
தினகரனிடம் சீறும் சசி குடும்பம்
சிறையில் உள்ள சசிகலாவின் கவனத்துக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். ' நீதிமன்றமாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் யாரிடமும் தினகரன் கலந்து ஆலோசிப்பதில்லை. அவரால்தான் எல்லாம் சாதிக்க முடியும் என நினைக்கிறார். நீங்கள் இல்லாவிட்டால், அவருக்கு அரசியல் வாழ்க்கை இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார். ஜெயலலிதாவைவிடவும் தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் கருதுகிறார். நீங்கள்தான் கடிவாளம் போட வேண்டும்' எனக் கூறியுள்ளனர். சசிகலாவாலும் தினகரனின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்கின்றனர்.
புதிய சின்னத்தில் நிற்பதா?
தனிக்கட்சி தொடங்குவது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், அதில் வரக்கூடிய சாதக, பாதகங்களை தினகரன் கணக்கிடவில்லை. அவரோடு இருக்கும் தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரும் அவருடைய முயற்சியை ஆதரிக்கவில்லை. இத்தனை காலம் இரட்டை இலையையே மூச்சாக நினைத்து வாழ்ந்துவிட்டு, இன்னொரு சின்னத்தில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை.
தினகரனுக்கு நம்பிக்கை
உள்ளாட்சியில் குக்கர் சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எடப்பாடி பழனிசாமியைத் தாண்டி அவ்வளவு எளிதாகக் கிடைக்கப் போவதில்லை. புதுக்கட்சி ஆரம்பிக்கும்போது, தினகரனுடன் இருப்பவர்களில் பாதிப்பேர் இபிஎஸ் முகாம்களுக்குப் போகவே வாய்ப்பு அதிகம். இதைத் தினகரனிடம் பலமுறை எடுத்துக்கூறிவிட்டனர் குடும்பத்தினர். ' நம்மைத்தாண்டி யாரும் அவர்களிடம் போக மாட்டார்கள்' என்கிறார் தினகரன். இதனை மறுத்துப் பேசியவர்களோ, ' நம்முடைய கைப்பிடியிலேயே இருந்த எம்.பி.நவநீதகிருஷ்ணன், எதிர்முகாமுக்குச் சென்றார். ஜக்கையனும் அப்படித்தான் போனார். தோப்பு வெங்கடாச்சலமும் எதிர்முகாமில் இருக்கிறார். இனியாவது நிலவரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மார்ச் 1 தனிக்கட்சி முடிவில் எந்த மாற்றத்தையும் செய்ய தினகரன் விரும்பவில்லை" என்கின்றனர் டெல்டா பகுதி அ.தி.மு.கவினர்.