நான் செத்தால் ஈழத் தமிழர்கள் வரமாட்டீர்களா? வரவேண்டாம்... இயக்குநர் சேரன் உருக்கம்
சென்னை: தாம் இறந்தால் ஈழத் தமிழர்கள் வரமாட்டீர்கள் என்றால் வரவேண்டாம் என்று இயக்குநர் சேரன் உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'கன்னா பின்னா' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் திருட்டு டிவிடி குறித்து இயக்குநர் சேரன் பேசினார். அவர் தமது பேச்சில், ஈழத் தமிழர்கள்தான் திருட்டு டிவிடிக்கு காரணம்... அவர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவறுப்பாக இருக்கிறது என கூறியிருந்தார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த சேரன், நான் யாரை சொன்னேன் என்பது உரியவர்களுக்கு புரியும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்றுக்கு சேரன் அளித்துள்ள பேட்டி:
நான் எந்த இடத்தில் பேசினேன் எந்த விசயத்திற்காக பேசினேன் என்பதை பொருத்து தான் அந்த கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 18000 கடைகள் இருக்கின்றன. இதை அனைத்தையும் சுட்டிக் காட்டினேன்.
இலவசமாக பார்க்கிறார்கள்...
அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து படம் வெளியான அன்றே இணையத்தளத்தில் போட்டுவிடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் இருக்க கூடிய தமிழர்கள் இலவசமாக பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளது.
இது யார் வெளியிடுவது என்று பார்க்கும் போது எங்களுக்கு வந்த தகவல், யாரோ சில இலங்கை தமிழர்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து வேலையை செய்கின்றனர் என்பதுதான்..
கடும் விமர்சனங்கள்..
இந்த பிரச்சனைக்கு இலங்கை தமிழர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று சொன்னதும், உலகம் முழுவதும் விமர்சனங்கள் வெடிக்கிறது. 15 வருடமாக போராடி கொண்டு இருக்கிறார்கள். இதனை எந்த ஒரு அமைப்பும் கேட்கவில்லை. ம்முடைய தோழர்கள் நம்முடைய தமிழர்கள், சகோதரர்கள் இந்த தொழிலை செய்யாதீர்கள்; முறையாக அனுமதி வாங்கி செய்யுங்கள் என்று எந்த அமைப்பாவது இவ்வாறு குரல் கொடுத்து இருக்கிறதா?.
எங்க ஆதங்கத்தையும் பாருங்க...
இவ்வாறு குரல் கொடுக்காதவர்கள், இந்த ஒரு குறையை குற்றச்சாட்டாக கொண்டு உடனே ஆர்ப்பரிக்கிறார்களே, இதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதே போல் ஆதங்கம் இருக்கும் என்பதற்காகவே நான் பதிவு செய்தேன். என்னுடைய ஆதங்கம் யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளேன்; தமிழ் நாட்டில் அரசியல் பெரும் கட்சிகளை எதிர்த்து கொண்டு தான் நானும், சீமானும் சேர்ந்து போராடினோம்.
செத்தா வரமாட்டீர்களா?
நீ என் சகோதரன்... நீயே ஏன்டா என் முதுகில் குத்துகிறாய் என்று கேட்டேன். என்னுடைய படம் பார்க்க மாட்டீர்களா பார்க்கவேண்டாம். நான் இறந்தால் வர மாட்டீர்களா வர வேண்டாம். ஆனால் உன்னுடைய சகோதரன் இப்படி எல்லாம் செத்துகிட்டு இருக்கிறான் என்பது உணர்ந்தால் போதும்.
அதே நேரத்தில் உன் அடையாளம் இது இல்லை....நீ நேர்மையானவன். நல்ல குடியில் பிறந்தவன். இதற்கு மேல் நான் இலங்கை தமிழர்களை பற்றி பற்றி பேசவே மாட்டேன். நான் இறந்தால் கூட யாரும் செய்தி போடவும் வேண்டாம்...