நாய்க் கண்காட்சி.. விஜயகாந்த் வளர்க்கும் லண்டன் நாய்களும் பங்கேற்பு!
சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெற இருக்கும் நாய்க்கண்காட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் லண்டன் நாய்களும் கலந்து கொள்ள இருக்கின்றன.
சென்னை நந்தனத்தில் நாய் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. நாளை தொடங்கும் சர்வதேச அளவிலான இந்த நாய் கண் காட்சியில் 750 நாய்கள் பங்கேற்கின்றன.
இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல வகையான நாய்கள் போட்டியில் கலந்து கொண்டு திறன்களை வெளிப்படுத்துகின்றன.
12 நடுவர்கள் பங்கேற்பு:
கண்காட்சியில் வெளிநாட்டை சேர்ந்த 12 நடுவர்கள் பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் டாபர்மேன், கிரேட்டன், ஜெர்மன் ஷெப் பர்டு போன்ற நாய்களின் அணிவகுப்பு நடக்கிறது.
விஜயகாந்தின் நாய்கள்:
நாய் கண்காட்சியில் சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் நாய்களும் பங்கேற்கின்றன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் நாய்களும் போட்டியில் கலந்து கொள்கின்றன. அவர் பராமரிக்கும் பலவகையான 10 க்கும் மேற்பட்ட நாய்கள் இதில் பங்கேற்கின்றன.
லண்டன் இறக்குமதி:
இதற்காக அவர் லண்டனில் இருந்து வாங்கிய 3 நாய்களும் வரவழைக்கப்பட்டன. அந்த நாய்கள் லண்டனில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தன.
விலை உயர்ந்த ரகங்கள்:
ஒரு சிகப்பு நாயும், 2 கருப்பு நாய்களும் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டன. விமானத்தில் பறந்து வந்த அந்த 3 நாய்களும் மிக விலை உயர்ந்த ரகத்தை சேர்ந்தவையாகும்.
விமானத்தில் வந்தவை:
ஒவ்வொரு நாயும் பல லட்சம் மதிப்புடையவை. இந்த நாய்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் கூண்டு வேன் ஒன்றில் அவற்றை ஏற்றி சென்றனர்.
சொகுசுப் பயணம்:
நாய்கள் பாதுகாப்பாக சொகுசாக பயணம் செய்வதை அங்கு இருந்த பயணிகள் பார்த்து வியப்படைந்தனர்.
கவர்னர் ரோசையா பரிசு:
இந்த நாய் கண்காட்சியை மெட்ராஸ் கேனைன் கிளப் நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் நாய்களுக்கு கவர்னர் ரோசையா பரிசு வழங்குகிறார்.