காதலனுடன் வெளியேறிய தேமுதிக எம்.எல்.ஏவின் மகள் பாதுகாப்பு கோருகிறார்
சென்னை: காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்ட தர்மபுரி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாஸ்கரின் மகள் பவித்ரா தனது பெற்றோரிடமிருந்து மிரட்டல் வருவதால் தனக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
தர்மபுரி தேமுதிக எம்எல்ஏ பாஸ்கரின் மகள் பவித்ரா. இவருக்கு வயது 19 ஆகிறது. என்ஜீனியரிங் படித்து வருகிறார். இவருக்கும், புளியம்பட்டியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அருள்பிரகாஷ், பவித்ராவுக்கு அண்ணன் முறை வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் காதலுக்கு பவித்ராவின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு விட்டனர். இதைத் தொடர்ந்து தற்போது பவித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்துள்ளார்.
அதில், நான் என்ஜினீயரிங் படித்து வருகிறேன். புளியம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது எனக்கும், அருள் பிரகாசுக்கும் காதல் மலர்ந்தது. அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நாங்கள் இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே எதிர்ப்பு வராது என்று நினைத்தேன். ஆனால் அருள் பிரகாஷ் வசதி குறைவானவர் என்பதால் என் பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பலவிதமாக எங்களை துன்புறுத்தினார்கள். வேறு திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
ஆனால் என்னால் அருள் பிரகாஷை மறக்கமுடியவில்லை. அவரும் என்மீது மாறாத அன்பு வைத்திருந்தார். எனவே கடந்த 20-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஏற்காடு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதற்கு பிறகும் எனக்கு அச்சுறுத்தல் வருகிறது.
இதுபற்றி சேலம் போலீஸ் கமிஷனரிடம் கடந்த 21-ந்தேதி மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் தந்தை செல்வாக்கால் கூலிப்படையை ஏவி எங்களை கொலை செய்ய பார்க்கிறார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பவித்ரா- அருள் பிரகாசுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் இதுவரை போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி 28-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications