தகுதியே இல்லாத தேமுதிக.. ஜெ. ஆவேசம்.. கூச்சல் போட்டு தேமுதிக போராட்டம்- வெளியேற்றம்!
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசக் கூட தகுதியே இல்லாத கட்சி தேமுதிக என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கோபமாக குறிப்பிட்டார்.
முதல்வரின் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். இதுதொடர்பான விவாதத்தின்போது, தமிழகத்தில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்ததாகவும் தேமுதிக உறுப்பினர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இதற்கு தனது பதிலுரையின்போது முதல்வர் ஜெயலலிதா, செயின்பறிப்பு குறித்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை இங்கு பதிவு செய்ய உறுப்பினர் முயற்சி செய்கிறார். ஆதாரம் இருந்தால் அதுபற்றி பேசலாம்.
சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக பேசும் சந்திரகுமாருக்கு அதுபற்றி சொல்ல அடிப்படை தகுதி வேண்டும். இதுகுறித்து பேச அவர்களுக்கு அருகதை இருக்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
8.2.13 அன்று வினா-விடை நேரத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய உறுப்பினர் மைக்கேல் ராயப்பனை தே.மு.தி.க. உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். இதையடுத்து சந்திரகுமார் உள்பட 6 பேர் அவை நடவடிக்கையில் இருந்து ஒரு வருடம் நீக்கி வைக்கப்பட்டனர். அது குறித்து அவர் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் உள்பட பலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட தலைவர் தே.மு.தி.க. நிர்வாகிகளை எப்படி நல்வழிபடுத்துவார். அந்த கட்சி தலைவர் பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசியதாக அவதூறு வழக்கு உள்ளது என்றார்.
அதற்குப் பதிலளித்த வி.சி.சந்திரகுமார், 10 ஆண்டுகளாக எங்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. நீங்கள் அதிகாரத்துக்கு வந்து பிறகு தான்.... என்று குறிப்பிட்டார். அப்போது ஜெயலலிதா குறுக்கிட்டு, தி.மு.க. ஆட்சியின் போது, தே.மு.தி.க. மீது வழக்கு இல்லை என்று, அ.தி.மு.க. ஆட்சியில் தான் தே.மு.தி.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டதாக சந்திரகுமார் சொல்கிறார்.
14.02.2011 அன்று மேட்டூர் எம்.எல்.ஏ ஆக உள்ள பார்த்தீபன், தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்ட முற்பட்ட போது போலீஸ் அதை தடுத்தது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார்.
இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து பதில் சொல்ல முற்பட்டனர். ஆனால் சபாநாயகர் அவர்கள் பேச வாய்ப்பு கொடுக்க வில்லை. சபாநாயகர் கூறுகையில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 1 மணி நேரம் பேச வாய்ப்பு கொடுத்து விட்டேன். இன்னும் 5 உறுப்பினர்கள் பேச வேண்டியுள்ளது. முதல்வரும் பதில் அளிக்க வேண்டும். எனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக உட்காருங்கள் என்றார்.
ஆனால், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அதை ஏற்க மறுத்தனர். தொடர்ந்து இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர். மேலும் பேச வாய்ப்பு தருமாறு கோஷம் எழுப்பினார்கள். வாய்ப்பு கொடு, வாய்ப்பு கொடு என்று சபைக்குள்ளேயே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் போட்டனர். இதனால் சட்டசபையில் 10 நிமிடம் கடும் அமளியாக இருந்தது. கூச்சல் - குழப்பம் நிலவியது.
இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றும்படி சபாநாயகர் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர்