தேமுதிக சின்னத்துக்கு உரிமை கொண்டாட திட்டம்? சந்திரகுமார் அணி இன்று மீண்டும் செய்தியாளர் சந்திப்பு
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர் சந்திரகுமார் அணியினர்.
சட்டசபை தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை நாளை பகலுக்குள் விஜயகாந்த் அறிவிக்க வேண்டும் என்று மதியம் அளித்த பேட்டியில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சந்திரகுமார், மாநில துணைச் செயலர் முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபன், வேலுார் மத்திய மாவட்ட செயலர் விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர் கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் சிவக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் சிவா ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளனர் என்று குற்றம்சாட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ஆறுமுகம், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பாபு முருகவேல், வேலுார் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீதர், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆனந்தபாபு, ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சுப்பிரமணி, ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கோபால், ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
இதனால் கோபமடைந்துள்ள சந்திரகுமார் அணியினர், தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தேமுதிகவின் சின்னமான முரசுக்கு தங்கள் அணி உரிமை கொண்டாடுவது என்றும், பொதுக்குழுவை கூட்டி விஜயகாந்த்தை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது என்றும், அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று சந்திரகுமார் அணியினர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்க உள்ளனர் என்று தெரிகிறது.