வி.சிக்கு ஒரு சீட் ஒதுக்கிய திமுக… விருட்டென்று வெளியேறிய திருமாவளவன்!
சென்னை: திமுக - விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையின் போது உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் உடனடியாக திருமாவளவன் வெளியேறியதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த சில தினங்களாக திமுக தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதன்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றும், அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
5 கேட்ட திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம், விழுப்புரம், தருமபுரி, திருவள்ளூர், பெரம்பலூர், தேனி உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து, இதில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி பேசினர். இதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒன்றுதான் கொடுப்போம்
சிதம்பரம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும், அதில் நீங்கள் (திருமாவளவன்) போட்டியிடுங்கள் என்று மட்டும் திமுக குழுவினர் கூறியுள்ளனர்.
மூணாவது கொடுங்களேன்
5 கேட்கும் இடத்தில், 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் திமுக தன் முடிவில் இருந்து இறங்கி வரவில்லை.
வியாழக்கிழமை பேசலாம்
அதனால் கருணாநிதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர். கருணாநிதியைச் சந்தித்தபோது, அவர் தொண்டை சரியில்லை என்று கூறி, வியாழக்கிழமை பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
வெளியேறிய திருமா
இதையடுத்து, திருமாவளவனும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது திருமாவளவன், அறிவாலயத்தையும் கடந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க் வரை நடந்தே சென்றார். பிறகு அங்கு அவருடைய வாகனம் வந்ததும், அதில் ஏறிச் சென்றார்.
அதிருப்தியில் வி.சி
திருமாவளவன் நடந்தே சென்றதால், அவர் கோபித்துக்கொண்டு சென்றதாக அறிவாலயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அப்போதே விடுதலை சிறுத்தைகளுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளைக்கூட ஒதுக்க திமுக முன் வராததால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
நோ கமெண்ட்ஸ்- கருணாநிதி
திருமாவளவன் வெளியேறியது தொடர்பாக கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், "நோ கமெண்ட்' என்று மட்டும் கூறினார்.
சண்டையில்லை சமாதானம்தான்
இந்த நிலையில் திமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவே இருந்தது. எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக மீண்டும் இன்று சந்தித்துப் பேச உள்ளோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
யாருக்காக வெயிட்டிங்
4 கூட்டணி கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிவிட்டு 36 இடங்களை திமுக தன்வசம் வைத்துள்ளது. கடைசி நேரத்தில் தேமுதிக உடனோ, காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையும் பட்சத்தில் இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.