எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் திமுக தொண்டரா?
சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டபோது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த பெட்ரோல் பாக்கெட்டுகளை மேடை மீது வீசினார். அந்த பாக்கெட் மேடை முன்பு வைக்கப்பட்டிருந்த (ஆம்ப்ளிஃபியர்) மீது விழுந்து தீப்பற்றியது.. எனவே அந்த இடத்தில் பதற்றம் நிலவியது.
இதை பார்த்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மேடையை விட்டு இறங்கி ஓடினர். கூட்டத்தை பார்க்க வந்தவர்களும் அலறியடித்து ஓடினர். இதில் மைக்செட் சாதனங்கள் மட்டும் எரிந்தது.
போலீஸ் விசாரணையில் பெட்ரோல் நிரம்பிய பாக்கெட்டை வீசி தீ வைத்தது தெரிந்தது. பின்னர் பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அங்கிருந்து காரில் ஏறி வேகமாக சென்று விட்டார். பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை, ஜலகண்டாபுரம் போலீசில் கட்சியினர் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் நிரம்பிய பாக்கெட்டை வீசியவர் ஜலகண்டாபுரம் சந்தைபேட்டையை சேர்ந்த ஆனந்தகுமார்(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் எஸ்பி ராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கைதான நபர் ஆனந்தகுமார், திமுகவை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.