ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் வாழக்கூடாது என நினைக்கவில்லையே.. ஜெ.வுக்கு உருகிய தி.மு.க.
தமிழக அரசியல் களத்தில் எதிர் துருவமாக நின்று சண்டை போடும் திமுகவினர், ஜெயலலிதா மறைவிற்கு பேனர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை: தமிழக அரசியலில் எதிர் எதிர் துருவகங்களாக நின்று சண்டையிட்டுக் கொள்பவர்கள் திமுகவினரும் அதிமுகவினரும். தலைவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும். தொண்டர்களுக்கு இடையில் ஏற்படுவதே இல்லை. ஆனால், அதனையும் மாற்றியுள்ளது ஜெயலலிதாவின் மறைவு.
75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். நேற்று அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவிற்கு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத் துறையினரும் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் அவருடைய புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பலர் அஞ்சலி பேனர்களை ஆங்காங்கே வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முக்கிய செய்தி என்னவென்றால், எதிரிக் கட்சியாகவே அதிமுகவினரால் நினைக்கப்படும் திமுகவினரும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி பேனர்களை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
வாழக் கூடாது என்று நினைக்கவில்லையே
ஈரோடு மாவட்டம் கோபியில் நகர திமுக சார்பில் ஜெயலலிதாவுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த பேனரில் "எதிரியாக இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... நீங்கள் ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம்... வாழக் கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே... இனி எங்கே காண்போம்... இதுபோன்ற பெருமை கொண்ட பேரூயிரே!!" என்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பேனரை வைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
50 அதிமுகவினர் மொட்டை அடித்து இறுதி அஞ்சலி
நேற்று சென்னையில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடைபெற்ற அதே நேரத்தில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வாழைக்காட்டுஓடை, கிரஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவ படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று சுடுகாட்டில் புதைத்தனர். பின்னர், 50க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.
மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் அஞ்சலி
குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் ஜெயலலிதாவின் மறைவிற்கு மீனவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதனால் விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் கடலுக்கு செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. 2வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோட்ச தீபம்
மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் கோபுரத்தில் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் தெற்கு சன்னதி கோபுரத்தில் முதலில் ஏற்றப்பட்ட மோட்ச தீபம் பின்னர், கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுரங்களிலும் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடராஜர் சன்னதியிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
ஜெயலலிதாவின் உருவத்தை மண்ணால் செய்து அஞ்சலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஜெயலலிதாவின் உருவத்தை மண்ணால் செய்து அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதாவின் உடலில் நேற்று பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை போர்த்தப்பட்டிருந்தது. ஜெயலலிதா போன்றே செய்யப்பட்ட மண் பொம்மைக்கும் அதே நிறத்தில் புடவை போர்த்தப்பட்டிருந்தது. பின்னர், பாடை கட்டி அதன் மீது அந்த உருவ பொம்மையை வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அதிமுக தொண்டர்கள் புதைத்தனர்.
பட்டினி கிடந்து துக்கம் அனுசரிப்பு
போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திராநகரைச் சேர்ந்த மக்கள், ஜெயலலிதாவின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் உணவு சமைக்கவில்லை. சாப்பிடவும் இல்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யும் வரை பட்டினியாகக் கிடந்து, ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.