உயிரினும் மேலான உடன்பிறப்புகளே- விரைவில் பேசுகிறார் கருணாநிதி.. டிரக்யாஸ்டமி கருவி அகற்ற முடிவு!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின், தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவியை எடுக்க டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி, சென்னை காவிரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கருணாநிதியின் கழுத்து பகுதியில் 'டிரக்யாஸ்டமி' என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இது மூச்சு விடுவதை எளிதாக்கும் வசதி கொண்ட கருவியாகும்.

மோடி சந்திப்பு
நோய் தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்பதால் பொது நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்பதில்லை. அதேநேரம், அவரை பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். சில மாதங்கள் முன்பு, பிரதமர் நரேந்திர மோடியும் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து ஆச்சரியம் ஏற்படுத்தியிருந்தார்.

கருவியை அகற்ற திட்டம்
தற்போது கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதால் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவியை அகற்ற டாக்டர்கள் ஆலோசித்து வருகிறார்களாம். ஆனால், அதற்கு முன்பாக கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டியது அவசியம். எனவே, கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பல், கண் சோதனைகள்
ஜனவரி 31ம் தேதி பல் சம்பந்தமான பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றிரவு கண் பரிசோதனைக்காக அவர் சென்னையிலுள்ள, அகர்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.

பேச ஆரம்பிக்க வாய்ப்பு
இதையடுத்து, வயிறு தொடர்பான பரிசோதனைகளை நடத்த உள்ளனர் என கூறப்படுகிறது. அனைத்து முழு உடல் பரிசோதனையும் முடிந்தபிறகு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள கருவியை எடுப்பார்களாம். அப்படி எடுத்துவிட்டால், கருணாநிதி பேசத் தொடங்கிவிடுவார் என்கிறார்கள். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications