பிரசாரக் கூட்டத்தில் ஜெ. படம் போட்ட 'மாஸ்க்' கொடுத்த போலீஸ்.. திமுக புகார்
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் படம் போட்ட முகத்திரைகளை போலீசாரே வழங்கி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் தி.மு.க. சார்பில் தலைமைக்கழக வக்கீல் பரந்தாமன் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த 16-ந்தேதி கள்ளக்குறிச்சி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அங்கு வந்த கூட்டத்தினருக்கு ஜெயலலிதாவின் படம் போட்ட முகத்திரையை போலீஸ் அதிகாரி ஒருவர் வழங்கிக்கொண்டிருந்தார். பத்திரிகையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த போலீஸ் அதிகாரி சட்டப்படி செயல்படாமல், அ.தி.மு.க. கட்சிக்காரர் போல் செயல்பட்டு இருக்கிறார். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேர்தல் விதிகளை மீறிய நிகழ்வாகும்.
மேலும், அரசு எந்திரம் முழுவதும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்காக இயக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே அந்த போலீஸ் அதிகாரியை தேர்தல் பணியாற்றத் தடை செய்ய வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.