உதயநிதிக்கு எதிராக திமுகவில் சலசலப்பு
திமுகவில் உதயநிதிக்கு எதிராக சலசலப்பு வெளிப்பட்டு வருகிறது.
சென்னை: திமுக தலைமை பதவிகளில் ஒன்றில் உதயநிதியை உட்கார வைப்பதற்கான லாபி படுதீவிரமாக நடைபெற்று வருவது அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷாலைத் தொடர்ந்து நடிகராக அவதாரம் எடுத்த உதயநிதியும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்திருப்பது திமுக மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஸ்டாலின், கனிமொழி... என்னதான் கருணாநிதியின் மகனாக, மகளாக இருந்தாலும் கட்சியில் அதிகாரத்தை அவர்களால் மிக எளிதாக பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது.
2 ஜி தீர்ப்பைத் தொடர்ந்து கனிமொழிக்கு முக்கிய பதவி கேட்கப்படுகிறது. ஆனால் அவருக்கு மகளிர் அணியே போதும் என அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில்தான் உதயநிதி அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருப்பதுதான் திமுகவின் சீனியர்களை அதிர வைத்திருக்கிறது. காலங்காலமாக கொள்கை பேசி உழைத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் அடிப்படைத் தொண்டனுக்கு திமுகவில் இனி என்ன மரியாதை என்ற விரக்தியை தீவிர திமுகவினரே சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திமுக தலைமை இதை கருத்தில் எடுத்துக் கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அண்ணாவுக்குப் பிறகு திமுகவை எப்படி கருணாநிதி கட்டிக் காத்தாரோ, அதே போல தற்போதைய தலைமையும் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், பல பின்னடைவுகளை கட்சி சந்திக்க நேரிடும் என்பது தீவிர திமுகவினரின் ஆதங்கமாக உள்ளது.