"ரேட்" ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. உள்ளுக்குள் புலம்பும் உடன் பிறப்புகள்!
சென்னை: அதிமுக விருப்ப மனுக் கட்டணத்தை விட இரண்டு மடங்குக் கட்டணத்தை திமுக தலைமை நிர்ணயித்திருப்பதால் திமுகவினரிடையே சலசலப்பு காணப்படுகிறதாம்.
அதை விட முக்கியமாக விருப்ப மனுக்களைப் பெறும் தேதியின் தொடக்கம் வேறு அவர்களை கலங்கடித்து வருகிறதாம். அதாவது தேய்பிறை நாளில் விருப்ப மனு பெறுவது தொடங்குவதால் இந்த விசனத்தில் உள்ளனராம் பெரும்பாலான திமுகவினர்.
என்னதான் திராவிடக் கட்சி என்று கூறிக் கொண்டாலும் கூட நாள் நட்சத்திரம் பார்ப்பதில் அதிமுகவுக்கு சற்றும் இளைத்தவர்கள் கிடையாது திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
24ம் தேதி முதல்
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 24ம் தேதி முதல் விண்ணப்பம் தரலாம் என்று கட்சி பொதுச் செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர்.
அடடா தேய் பிறையாச்சே
ஆனால் 24ம் தேதி தேய்பிறையில் வருகிறது. இது ஆன்மீக நம்பிக்கையுள்ள திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேய்பிறையில் பார்த்தா மனு வாங்க ஆரம்பிப்பார்கள் என பலர் புலம்புகின்றனராம்.
பெளர்னமிக்கு முன்னாடி வச்சிருக்கலாம்
அதிமுக படு விவரமாக பெளர்னமிக்கு முன்பாகவே அதாவது வளர் பிறையில் நாள் குறித்து விருப்ப மனுக்களை வாங்க ஆரம்பித்து விட்டது. அதேபோல நாமும் செய்திருக்கலாம் என்று பல திமுகவினரின் கருத்தாக உள்ளதாம்.
பிப்ரவரி 10ம் தேதி வரை
ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை திமுக விருப்ப மனுக்களைப் பெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
கட்டணம் அதிகம்
மேலும் விருப்ப மனு விண்ணப்பத்துடன் ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்றும் திமுக தலைமை கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது அதிகம் என்று திமுகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறதாம். ஆளுங்கட்சியான அதிமுகவே ரூ. 11,000தான் வாங்குகிறது என்றும் திமுகவினர் கூறுகிறார்கள்.
விடுங்க பாஸ்.. அடுத்து ஆளுங்கட்சியாகி, எம்.எல்.ஏவும் ஆகி விட்டால் ஒரே நிமிடத்தில் "ரிட்டர்ன்" எடுத்திர மாட்டீங்களா!