மக்கள் நலன் மீது அக்கறையற்றவர் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் - துரைமுருகன் குற்றச்சாட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் நலன்கள் மீது அக்கறையற்றவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நீட் தேர்வு மசோதா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி துரைமுருகன் பேசினார். இதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
இதனை கண்டித்தும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உரையை புறக்கணித்தும் அமைச்சர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் குறித்து பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்கியதால் வெளிநடப்பில் ஈடுப்பட்டதாக சட்டசபை வளாகத்தில் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கூறினார்.
மக்கள் மீது அக்கறையற்றவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மக்களை பாதிக்கும் போதை வஸ்துகளை விற்ற பணத்தை பங்கு போட்டுக்கொண்டவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதை பற்றி சட்டசபையில் பேசினோம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றும் துரைமுருகன் கூறினார்.
நீட் தேர்வு மசோதாவை குடியரசுத்தலைவர் பார்வைக்கே அனுப்பவில்லை என்றும் துரைமுருகன் குற்றம் சாட்டினார். ஒரே நாளில் இன்று இரண்டு முறை திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.