அடுத்தடுத்து 3 முக்கிய தேர்தல்களில் ஹாட்ரிக் தோல்வி.. தடுமாறுகிறதா திமுக?
சென்னை: பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவுக்கு கடந்த 3 தேர்தலிலும் படுதோல்வி முகமே. எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதும், காங்கிரஸ் உதவியோடு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. பின்னர், 2011 சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியையே பரிசாக பெற்றது திமுக.
அக்கட்சிக்கு வெறும் 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 29 தொகுதிகளை வென்ற தேமுதிக எதிர்க்கட்சியானது.
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்
இதில் வேடிக்கை என்னவென்றால், தேமுதிக அப்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றது. எனவே ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாகவும் அதிமுக கூட்டணியே பதவிகளை பிடித்தது.
லோக்சபா தேர்தல்
இந்நிலையில், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளிலும், அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜக தலைமையில் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தோல்வி
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் திமுக 15 தொகுதிகளிலாவது வெல்லும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், திமுக எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேநேரம், அதிமுக 37 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 தொகுதிகளிலும் வென்று வாகை சூடின.
முக்கியமான தேர்தல்
இந்நிலையில், 2016 சட்டசபை தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமாக மாறியது. ஸ்டாலினை தூக்கி நிறுத்த இந்த வெற்றி கருணாநிதிக்கும் மிகவும் அவசியப்பட்டது.
ஹாட்ரிக் தோல்வி
ஆனால், இந்த தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம், முக்கியமான மூன்று தேர்தல்களில் திமுக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தடுமாறியபடி உள்ளது. நடுவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்வி வேறு கதை என்பது குறிப்பிடத்தக்கது.