கத்தாரில் உள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் - சுஷ்மாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கத்தாரில் வாழும் தமிழர்கள் உட்பட 6.5 லட்சம் இந்தியர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : கத்தார் நாட்டில் வசிக்கும இந்தியர்களின் நலனைக் காக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ், மற்றும் அல்- கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகள், கத்தார் நாட்டுடன் இருந்த தூதரக உறவை முறித்துக்கொள்வதாக நேற்று அறிவித்தன. ராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை துண்டிக்கவும், அந்நாட்டுடனான தரை, கடல் மற்றும் வான்வழி தொடர்பையும் துண்டிக்கவும் சவுதி அரேபியா முடிவு செய்வதாக தெரிவித்தன.
இதனால் கத்தாரில் பணி நிமித்தமாக சென்று பணியாற்றும் இந்தியர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையடைந்தனர். உடனடியாக எந்த விளைவுகளும் தெரியாத நிலையில் அங்குள்ள உறவினர்களின் நிலை என்ன என்று தெரியாமல் தமிழர்கள் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து கத்தார் சென்றுள்ளவர்களின் நிலை குறித்து பதற்றம் நிலவுகிறது.
கத்தாரில் உள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் - சுஷ்மாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் pic.twitter.com/QHjuw5Y6l3
— Oneindia Tamil (@thatsTamil) June 6, 2017
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் நலனை காக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கத்தார் நாட்டுடன் அரபு நாடுகள் உறவைத் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கத்தாரில் வசிக்கும் 6.5 லட்சம் இந்தியர்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது என்று சுஷ்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.