சர்டிபிகேட்டுகளை லேமினேஷன் செய்யாதீர்கள்... அரசு தேர்வுகள் இயக்குனரகம்
சென்னை: மதிப்பெண் சான்றிதழ்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றை லேமினேஷன் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலப்போக்கில் கிழிந்தோ அல்லது தண்ணீர் உள்ளிட்டவைகளால் பாதிக்கப் பட்டோ விடாமல் இருப்பதற்காக பல மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்து விடுகிறார்கள். ஆனால், அவற்றில் ஏதாவது மாறுதல் செய்ய முனையும் போது இதனால் சிக்கல் உண்டாகிறது.
எனவே, மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல் இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளது அரசுத் தேர்வுகள் இயக்குனரகம்.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :
அரசு தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் "லேமினேசன்" செய்வதாக தெரியவருகிறது."லேமினேசன்" செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது "லேமினேசன்" செய்திருந்தால் திருத்தம் செய்வது கடினமாக உள்ளது.
வெளிநாடு செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கும்போது லேமினேசனில் இருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் "லேமினேசன்" செய்ய வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications