சம்மர் கிளாஸ் நடத்துனீங்க.. அவ்வளவுதான்.. கே.ஏ.செங்கோட்டையன் கடும் எச்சரிக்கை
தூத்துக்குடி: கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி கும்பிட அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை பாயும். கல்வி துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இதுகுறித்து போதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஆனால், சில தனியார் டியூசன் சென்டர்கள் 10 மற்றும் பிளஸ்டூ செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இப்போதே தனி வகுப்புகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோடை வெயிலில் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு அலைந்து வருகின்றனர். தனியார் டியூசன்களை அரசு கட்டுபடுத்த முடியாது என்பதால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று வகுப்புகள் நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.