எதற்கெடுத்தாலும் கமிஷனரிடம் புகார் தரக் கூடாது.. ஹைகோர்ட் கண்டிப்பு
சென்னை : எதற்கெடுத்தாலும் கமிஷனரிடம் போய் புகார் கொடுக்கக் கூடாது. உரிய காவல் நிலையத்தில்தான் புகார் தர வேண்டும் என்று சென்னை உயர்நீீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக திரைத்துறையினர், குறிப்பாக நடிகர், நடிகையர் சென்னை காவல்துறை ஆணையைர சந்தித்துப் புகார் தருவது அதிகரித்து வருகிறது. மேலம் பலரும் கமிஷனரிடம் புகார் தரவே விரும்பி கமிஷனர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஒருவர் போலீஸ் கமிஷனிடம் கொடுத்த புகார் தொடர்பாக நீதி்மன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நடிகையால் புகாருக்குள்ளானவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி நாகமுத்து மனுதாரர், நடிகை ஆகியோரின் பெயர்களை வெளியிட தடை விதித்து பிறப்பித்த உத்தரவு....
நேராக கமிஷனரிடம் போன நடிகை
தன்னுடன் குடும்பம் நடத்தி மோசடி செய்துவிட்டார் என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் நடிகை ஒருவர் நேராக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். இதை பத்திரிகைகள் விளம்பரம் செய்கிறது.
இது தவறு
இது தவறானது. கிரிமினல் நடைமுறை சட்டப்படி பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தான் புகார் கொடுக்கவேண்டும். புகார் பெற்றதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதை தாமதப்படுத்தக்கூடாது.
வழக்குப் பதிவாகவில்லை என்றால் போகலாம்
போலீசார் புகாரை பெற்ற பிறகு எதுவும் செய்யாமல் வழக்கு பதிவு செய்யாமல்இருந்தால் உடனே உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். கமிஷனரிடம் அப்போது புகார் கொடுக்கலாம். அந்த நேரத்தில் கமிஷனர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்.
புகார் கொடுத்தால் உடனே பதியுங்கள்
ஆகவே போலீசார் பொதுமக்களிடம் புகார் பெற்றால் உடனே விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு நகலை உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி, ஆகியோருக்கு பதிவாளர் ஜெனரல் உடனே அனுப்பவேண்டும். அதை பெற்ற போலீஸ் டிஜிபி அதை தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பிக்கள் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.
ஜாமீன்
இதில் நான் தீவிரமாக விசாரிக்க விரும்பவில்லை. எனவே மனுதாரர் ரூ.10 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு தனி நபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பெயரை வெளியிட்டால் களங்கம் ஏற்படும்
சம்பந்தப்பட்ட நடிகை, அவர் புகார் கூறிய நபர் ஆகியோரின் பெயர்களை வெளியிட்டால் அது அவர்களது நற்பெயரைக் கெடுத்து விடும் என்பதால் அதை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது.