மாட்டிறைச்சி விவகாரத்தில் புதிய திருப்பம்: ட்விட்டரில் விஸ்வரூபமெடுத்த திராவிட நாடு கோஷம்!
மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்து தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிடநாடு அமைய வேண்டும் என்ற கோஷம் ட்விட்டரின் டிரெண்டாகி வருகிறது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோஷம் உயிர்பெற்று ட்விட்டரில் டிரெண்டாகி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்துள்ளது.
கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மாட்டுக்கறி திருவிழா நடத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களோ நிச்சயமாக இந்த உத்தரவை அமல்படுத்தவே முடியாது என அறிவித்து வருகின்றன.
திராவிட நாடு
இந்நிலையில் திடீரென #dravidanadu என்ற ஹேஷ்டேக் போட்டு கேரளா நெட்டிசன்கள் ட்விட்டரில் கருத்துகளை பதிவு செய்யத் தொடங்கினர். திராவிட நாடு என்ற முழக்கம் உதயமானதே தமிழ் மண்ணில்தான்.
தந்தை பெரியார்
1940களில் திராவிட நாடு என தந்தை பெரியார் கோரியது கூட அன்றைய சென்னை மாகாணத்தை தனி திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அண்ணாதான் நிலப்பரப்பு அடிப்படையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரினார்.
|
அண்ணா
அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் கூட முழங்கப்பட்டது. பின்னர் அண்ணாவும் அந்த தனி திராவிட நாடு கோஷத்தை கைவிட்டார். அப்போதெல்லாம் எதுவும் பேசாத தென்னிந்திய மாநிலங்கள் இப்போது மாட்டுக்கறிக்கு தடை என்றவுடன் திராவிட நாடு கோஷத்தை கையிலெடுத்திருப்பதுதான் ஆச்சரியமானதாக இருக்கிறது.
|
தமிழகம்
ஏற்கனவே மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ள தமிழக மக்களும் இப்போது ட்விட்டரில் திராவிட நாடு முழக்கத்துக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாடு இன்னொரு பிரிவினையை சந்தித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.