பொருட்கள் தட்டுப்பாடு இல்லையா.. ரேஷன் கடைக்கு வர்றீங்களா.. அமைச்சர்களுக்கு துரைமுருகன் சவால்
ரேஷன் கடைகளுக்கு அமைச்சர்கள் வரத் தயாரா என துரைமுருகன் சட்டசபையில் சவால் விட்டுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைக்கிறது என்ற அமைச்சரின் பதிலுக்கு துரைமுருகன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்ன அமைச்சரிடம், ரேஷன் கடைக்கு வந்து நிரூபிக்க தயாரா என துரைமுருகன் சட்டசபையில் சவால்விட்டுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்தில் இன்று, ரேஷன் கடைகளில் சரி வர பொருட்கள் கிடைக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.
அமைச்சரின் பேச்சில் இடைமறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்எல்ஏக்களுடன் ரேஷன் கடைகளுக்கு அமைச்சர்கள் வந்து பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்பதை நிரூபிக்கத் தயாரா என்று சவால் விட்டார்.
தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ள நிலையில், சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அளித்துள்ள பதில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.