பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என சொன்னது ஜெயலலிதாதானே..... துரைமுருகன் பதிலடி
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொன்றபோது திமுக ஆட்சியில் இருந்தது என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசியதற்கு பதிலடியாக பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர் முதல்வர் ஜெயலலிதாதான் என்று திமுகவின் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2-வது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ., வெற்றிவேல் பிரபாகரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தது திமுகதான் என சாடிப் பேசினார்.
வெற்றிவேல் பேச்சால் அமளி
வெற்றிவேல் பேச்சுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதிமுக- திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கைநீட்டிப் பேச பரபரப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் எச்சரிக்கை
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர்கள் அவை மரபுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாமல் கூச்சலிட்டு கூட்ட நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றார்.
துரைமுருகன் சவால்
பின்னர் பதிலளித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், பிரபாகரனை கொன்றபோது திமுகதான் ஆட்சியில் இருந்தது என்று வெற்றிவேல் கூறினார். ஆனால் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறியவர் முதல்வர் ஜெயலலிதா. இலங்கை தமிழர் விவகாரம்குறித்து முழுமையாய விவாதிக்க திமுக தயார்.... அதிமுக தயாராக உள்ளதா? என்று சவால் விடுத்தார்.
ஓபிஎஸ் பதில்
இதையடுத்து பேசிய நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணவும், சம உரிமை பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்ன மாதிரியான நடவடிக்கை என்பது குறித்து விளக்கமாக ஆளூநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.