கமல் ஊழலுக்கு எதிராகப் பேசியதில் என்ன தப்பு இருக்கு.. கம்யூனிஸ்டுகள் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
ஊழலுக்கு எதிராக கமல் பேசிய பேச்சுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கமல் ரசிகர் மன்றம் இணைந்து புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை: தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கமல் ரசிகர் மன்றம் இணைந்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தின.
நடிகர் கமல் ஹாசன், தமிழகத்தின் ஊழல்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இவருக்கு எதிராக அதிமுக அம்மா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் ஊழல் தொடர்பான கருத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் லோக் ஆயூக்தா சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், கமல் ரசிகர் மன்றத்தினரும் புதுக்கோட்டையில் ஒன்று கூடி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தலைவர் ஜி.பன்னீர்செல்வம், கமல் நற்பணி மன்ற மாவட்டப் பொறுப்பாளர் கமல்சுந்தர், கமல் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால், பொருளாளர் கே.நித்தியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊழலுக்கு எதிராகவும், கமலுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஏராளமான கமல் ரசிகர்களும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்..