ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.. திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்: காரணம், டிராபிக் ராமசாமி!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை கவனித்து வந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ், அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஆணையரை மாற்றக்கோரி சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி மனு கொடுத்த 24 மணிநேரத்திற்கும் காவல்துறை ஆணையரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆளும்கட்சிக்கு சாதகமாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவை தேர்தல் ஆணையம் அதிரடியாக இன்று இடமாற்றம் செய்துள்ளது. சைலேஷ் குமார், மதுரை மாநகர காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த சஞ்சய் மாத்தூர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றவைத்த டிராபிக் ராமசாமி
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டிராபிக் ராமசாமி நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த முக்கியமான அரசு அதிகாரிகளை ஏற்கனவே மாற்றியுள்ளனர். ஆனால் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தொடர்ந்து இருக்கிறார். அவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
சைலேஷ் குமார் யாதவ் தொடர்ந்து இங்கு பணியாற்றினால் இந்த இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே போலீஸ் கமிஷனரை 48 மணி நேரத்தில் பணியிடமாற்றம் செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
அவர் கூறிய படி 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே திருச்சி காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.