தினகரனை கண்டுக்காதீங்க... எம்எல்ஏக்களுக்கு எடப்பாடியாரின் அட்வைஸ் - எச்சரித்த ஓபிஎஸ்
சட்டசபையில் தினகரனை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்றும், அவர் பேசுவதற்கு பதில் கூற முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: உங்களைப் போல தினகரனும் ஒரு எம்எல்ஏதான். அவர் வரும்போது யாரும் எழுந்து நின்று விடாதீர்கள். அவர் என்ன கேட்டாலும் நாங்களும், அமைச்சர்களும் பார்த்துக் கொள்கிறோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சி எம்எல்ஏக்களிடம் கூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. ஜனவரி 8ஆம் தேதியன்று எதிர்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ தினகரனை எப்படி சமாளிப்பது என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் புதிய உறுப்பினரான தினகரன் பேசும்போது என்னையும், நம் ஆட்சியையும் சரி கடுமையாக விமர்சனம் செய்வார். அதை காதிலேயே வாங்காதீங்க என்று கூறினாராம்.

தினகரனை கண்டு கொள்ள வேண்டாம்
நம்மை விமர்சனம் செய்ய வேண்டும் என அவர் எந்த எல்லைக்கும் போவார். எதையும் நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தினகரன் என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். நீங்க யாரும் எந்தக் காரணத்துக்காகவும் கூச்சல் போட்டுடாதீங்க.

ரகளை எம்எல்ஏக்கள்
நாம பதில் சொன்னால்தான் எதிர்கட்சியினர் அதிகமாக சத்தமாக கத்துவார்கள். எனவே கண்டுக்காம விட்டுட்டா கத்திட்டு அடங்கிடுவாங்க. அதே போல தினகரனை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நமக்கு நல்லது. அதேபோல நம் கட்சியில் உள்ள சிலரே தினகரனை ரகசியமாக போய் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள் என எனக்கு தகவல் வருகிறது. அது நல்லதுக்கு இல்லை.

எம்எல்ஏ பதவி போகும்
இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இனி அவரை யாரும் சந்திக்காதீங்க. பேசாதீங்க. தினகரன் கையில் ஆட்சி செல்வதை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. அப்படி ஏதாவது முயற்சிகள் நடந்தால் ஆட்சி கலைந்து தேர்தல்தான் வரும். புதிய ஆட்சி அமைய வாய்ப்பில்லை. அனைவரும் பதவி இழக்க நேரிடும். மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்குமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என யாரும் கனவு காண வேண்டாம். அது ஒருபோதும் நடக்காது

ஸ்லீப்பர் செல் இல்லை
நம்முடைய நேரடியாக எதிரி என்றால் இப்போ தினகரன்தான். இன்னும், தன்னோட ஸ்லீப்பர் செல் அதிமுகவில் இருக்காங்க என்று தினகரன் சொல்கிறார். அப்படி யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும். இருந்தால் எனக்கு தெரிந்துவிடும். உளவுத் துறை அதிகாரிகள் எல்லோரையும் உன்னிப்பாக கவனித்து தினமும் எனக்கு ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் இனி நமக்கு வேண்டப்படாதவரைப் பார்க்காதீங்க, பேசாதீங்க.

ஆப்சென்ட் ஆகாதீங்க
அதேபோல கட்சியோட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் இப்போ வெளியிடுறோம். அதில் உள்ளவர்கள் தவிர வேறு யாரும் பேட்டி கொடுக்கவோ விவாதங்களில் பங்கேற்கவோ செல்லக் கூடாது. மீறிச் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

டென்சனே ஆகாதீங்க
முன்னதாக பேசிய ஓபிஎஸ், சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நிறைய கேள்வி கேட்பாங்க. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆர்வக்கோளாறில் எழுந்து டென்ஷனாகிப் பேச வேண்டாம். அந்தந்தத் துறைக்கான அமைச்சர்கள் பதில் சொல்லுவாங்க. உங்களை டென்ஷன் ஆக்கணும் என்பதற்காகத்தான் அவங்ககிட்ட இருந்து கேள்விகளே வரும். அதுக்கெல்லாம் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம் என்று தனது பங்குக்கு ஆலோசனை கூறியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications