மதுரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தடபுடல் வரவேற்பு.. கூட்டம் தான் கொஞ்சம் குறைவு!
மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை.
மதுரை: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டு வருகிறார். மதுரையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1.30 மணிக்கு மதுரை வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றது போலவே, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் ப்ளக்ஸ் பேனர்கள், தோரணங்கள் என வரவேற்பு எல்லாம் தடபுடலாக இருந்தது.
முதல்வர் வருகையொட்டி மதுரை ரிங் ரோட்டில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை இணைத்து 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் இளைஞர் பெருவிழா நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் ஆள் சேர்ப்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் விதத்தில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை நடத்துவதாகவும், மாணவர்கள் அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு 500 ரூபாய் மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகித்து அரசு பஸ்களை இலவசமாக இயக்கியதாகவும் கூறப்படுகிறது. என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை. மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருவதால் தொண்டர்களே பெரும்பாலனோர் வரவில்லை. எப்படியே விழா ஒரு வகையில் நடந்து முடிந்தது.
அதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் மாலையில் மேம்பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு எந்த அளவுக்கு கூட்டத்தை காட்டப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications