எதிர்க்கட்சி நாங்க தான்.. மயிலாடுதுறையில் வயலில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி..வெள்ள பாதிப்பில் ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வயலில் இறங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
சில இடங்களில் வழக்கத்தை விட அதிகளவில் கனமழை பெய்தது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் நீர் தேங்கியது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் நீர் தேங்கி வடிந்தது.
மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்!
மழை வெள்ள பாதிப்பு
இந்நிலையில் தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிச்சாமி 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். சென்னை முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகள் வழங்கினார். அதிமுக உள்கட்சி பிரச்சனையால் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் இருப்பதாக எழுந்த புகாருக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட பாதிப்பு
இதற்கிடையே தான் மயிலாடுத்துறையை பொறுத்தமட்டில் சில இடங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 11ம் தேதி இரவு ஒரேநாளில் சீர்காழியில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது. மேலும் அதனை சுற்றிய பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய பயிர்கள், குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்தன. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர் மாவட்டம் வல்லம்படுகை கிராமத்துக்கு சென்று மழை வெள்ள நிவாரண உதவிகள் வழங்கினார். அதன்பிறகு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நல்லூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீரில் பயிர்கள் மூழ்கிய நிலையில் அதனை பார்வையிட்டார். வயலில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரில் நனைந்த பயிர்களை பார்த்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.
விவசாயிகள் கோரிக்கை
அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். மொத்தம் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்சூரன்ஸ் தொகைக்கான நாளை நீட்டிப்பு செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யவும், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டஈடு வழங்கவும் குரல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளுக்காக அதிமுக குரல் கொடுக்கும் என உறுதி அளித்தார்.
ஸ்டாலின் ஆய்வுக்கு பிறகு..
முன்னதாக கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். விவசாய நிலங்களை பார்வையிட்ட அவர் மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவக்கும் ரூ.1000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.