எடப்பாடியை முதல்வாராக்கியது சசிகலாதான்... அடித்து சொல்லும் தங்கதமிழ் செல்வன்
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதே சசிகலாதான் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.
தஞ்சை: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதே சசிகலாதான் என்றும் அவர் கூறியதால்தான் எம்எல்ஏக்கள் எடப்பாடியை தேர்ந்தெடுத்தோம் என்றும் ஆண்டிப்பட்டி எம்எல்ஏவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
சசிகலாவின் உறவினர்களான விவேக், தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோரை குறிவைத்து கடந்த வாரம் 187 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது எப்படி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குமுறினர்.

முதல்வர் எடப்பாடி
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் போயஸ் கார்டனில் எதற்காக ரெய்டு நடந்தது என்பதும் யாராலும் நடைபெற்றது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு சிலரின் தவறான செயலால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது.

எம்எல்ஏக்கள்தான்
என்னை முதல்வராக்கியது சசிகலாதான் என்று தினகரன் அவ்வப்போது கூறி வருகிறார். அது தவறு. அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவால்தான் நான் எம்எல்ஏ ஆனேன். மேலும் அது எனது விசுவாசத்திற்கு கிடைத்த பொறுப்பு என்று தெரிவித்த முதல்வர், தினகரனை ஏன் பெரிய ஆளாக்குகிறீர்கள் என்று செய்தியாளர்களை கடிந்து கொண்டு அவரை கடுமையாக விமர்சித்தார்.

தங்கதமிழ் செல்வன் பேட்டி
முதல்வர் பதவி எப்படி கிடைத்தது என்பது குறித்து முதல்வரின் பேட்டி தொடர்பாக தஞ்சையில் தங்கதமிழ் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2001 மற்றும் 2006- ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பழனிச்சாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் டிடிவி தினகரன் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு 1999-இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆட்சி மன்றத்தில் முடிவு
ஜெயலலிதா இருந்தபோது பல்வேறு பதவி உயர்வுகளை பெற்றவர் தினகரன். அதிமுக பொருளாளராக தினகரன் இருந்தபோது தலைமை கழகத்துக்கு வரமுடியாமல் இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனை குறை கூறுவது தவறானதாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆட்சி மன்றம் கூடி தினகரனை தேர்ந்தெடுத்தனர். அதில் அமைச்சர் செங்கோட்டையனும் இருந்தார்.

தவறான தகவல்
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தினகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டதை பாருங்கள் (எடப்பாடி பேசும் ஒரு வீடியோவை போட்டு காண்பித்தார்). ஆனால் தான் சேலத்தில் இருந்தபோது தினகரன் அவராகவே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார் என்கிறார் எடப்பாடி.

எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கவில்லை
கூவத்தூரில் எங்களுடன் எடப்பாடியும் தங்கியிருந்தார். சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதால்தான் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். சசிகலா கொடுத்த பதவியை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் எம்எல்ஏக்களை கொண்டு முதல்வராக பழனிச்சாமி ஆகிவிட முடியுமா என்று தங்கதமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications