விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்ய வேண்டும்.. கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்த மூதாட்டி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த ஒரு மூதாட்டி, அங்கு திடீரென பட்டாசு வெடித்ததால் பரபரப்பானது. அவரிடம் அங்கிருந்த போலீஸார் விசாரித்தபோது, ஈழத்தைச் சேர்ந்த அகதிப் பாட்டி, வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்பதை கொண்டாடுவதற்காக வெடி வெடித்ததாக கூறினார்.
அந்தப் பாட்டியின் பெயர் காசியம்மாள். 75 வயதாகும் அவர் துணிப் பையுடன் ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார். பின்னர் கையில் இந்திய தேசியக் கொடியை பிடித்தபடி அங்கு பட்டாசை வெடித்தார். பின்னர் இந்தியா வாழ்க.. இலங்கையில் தமிழினம் வாழ்க என்று கோஷமிட்டார்.
தொடர்ந்து சீனிச் சர வெடியை எடுத்து வெடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் உள்ளிட்டவர்கள் பாட்டியை நெருங்கி என்னாச்சுத்தா, எதுக்கு இந்த வெடி...என்று கேட்டபோது, நான் ஈழத்து பெண். என் பேரு காசியம்மாள். அகதியாக இந்தியா வந்தேன் என்னை தோப்புக் கொல்லை முகாமில் தங்க வைத்தார்கள்.
என்னைப் போலவே என் தமிழின மக்கள் அகதிகளாக இங்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் எங்கும் போகிறார்கள். இன்று அவர்களை ஆள தமிழன் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். அந்த விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும். எம் மக்களுக்கு தனி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இனியும் எம் மக்கள் எங்களைப் போல அகதிகளாக செல்லக் கூடாது.
அதற்காகத் தான் பதவி ஏற்பு நாளில் பட்டாசு வெடித்து இந்திய தேசிய கொடியுடன் வந்தேன். இந்தியா எம் மக்கள் வாழ உதவ வேண்டும். அதற்காகத் தான் இந்திய தேசிய கொடியை உயர்த்தினேன் என்றார் காசியம்மாள்.
அவரது பதிலில் தெரிந்தது...முதுமையிலும் தளராத இளமையுடன் கூடிய இன உணர்வுதான்!












Click it and Unblock the Notifications