கரூரில் ரயிலில் செல்லும் போது நெஞ்சுவலி: மூதாட்டி பரிதாப பலி
கரூர்: விருதுநகரில் இருந்து மைசூருக்கு செல்லும் ரயிலில் சென்ற மூதாட்டி நெஞ்சுவலி காரணமாக பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உரிய மருத்துவ வசதி இல்லை என்று கூறி பயணிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகரைச் சேர்ந்த சவுண்டையா என்பவரது மனைவி ராஜலட்சுமி(68). அவர் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விருதுநகரில் இருந்து மைசூருக்கு புறப்பட்டார்.
இந்த ரயில் திண்டுக்கல் தாண்டியதும் ராஜலட்சுமிக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையம் மூலம் கரூர் ரயில் நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது கடும் நெஞ்சுவலியால் ராஜலட்சுமி துடித்தார். ஆனால் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அவர் கரூர் ரயில் நிலையத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள் ராஜலட்சுமிக்கு உரிய சிக்சை அளிக்க கரூர் ரயில் நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கரூர் ரயில் நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ராஜலட்சுமி பலியாக காரணமாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பிறகு ராஜலட்சுமியின் உடல் விருதுநகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.