”இரட்டை வாக்குரிமை மக்கள்”- குழப்பம் மற்றும் தலைவலியில் தேர்தல் ஆணையம்
கோவை: தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநில எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரட்டை ஓட்டுரிமை காணப்படுவதால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை அறிய இயலாமல் முழி பிதுங்கி வருகின்றது தேர்தல் ஆணையம்.
குறிப்பாக கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த பலருக்கு தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு இடங்களிலும் ஓட்டுரிமை இருப்பதால் அவர்களை கண்டறிவதில் தேர்தல் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் வெவ்வேறு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது. கேரள மாநிலத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது.
கேரள எல்லையான கோவை:
கேரள எல்லையை ஒட்டிய கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். குறிப்பாக கோவை நகரப்பகுதியில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மக்கள் வசிக்கின்றனர்.
இரண்டு வாக்காளர் அட்டைகள்:
இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மலையாளி வாக்காளர்களுக்கு கேரள மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளன.
இரட்டை வாக்குரிமை அபாயம்:
இதனால், இவர்கள் கேரளாவிலும், தமிழகத்திலும் இரட்டை வாக்குரிமையை பயன்படுத்த அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில், தேர்தல் முடிந்து 14 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் தேர்தல் நடப்பதால் அரசியல் கட்சிகளில் அதிக ஈடுபாடு கொண்ட வாக்காளர்கள் இரண்டு ஓட்டுக்கள் போட ஆர்வம் செலுத்துவார்கள்.
”மை” அழிந்துவிட்டால் பிரச்சினை:
அதிக நாட்கள் இடைவெளி இருப்பதால் விரலில் வைக்கப்படும் மையும் அழிந்து போக வாய்ப்புள்ளது. ஒரே தொகுதியில் இரண்டு ஓட்டுக்கள் இருந்தால் கள்ள ஓட்டு போட முயற்சிக்கும்போது கண்டுபிடித்து விடலாம். ஆனால், வெவ்வேறு மாநிலங்களில் ஒருவரது பெயர் சேர்க்கப்பட்டு இருந்தால் பெயரை கண்டுபிடிக்க போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை.
உள்ளூர்னா ”ஓகே”:
காரணம் வாக்காளர் பட்டியல் மென்பொருள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இதனால் இரட்டை ஓட்டுக்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்குள் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு போடும் போது அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் கட்சிக்காரர்கள் கண்டுபிடித்து விடுவர்.
கேரளாவாச்சே கஷ்டம்தான்:
ஆனால், கோவை நகரப்பகுதியில் வசிக்கும் கேரள மாநிலத்து வாக்காளர்கள் இரட்டை ஓட்டு போடுவதை கண்டு பிடிப்பது சிக்கலான காரியம் ஆகும்.
மாறும் மென்பொருள்:
இது பற்றி கோவை மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி, "ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்காளர் பட்டியல் மென்பொருள் மாறுபடும். கேரள மாநிலத்தில் மலையாளத்தில் பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றிருக்கும்.
அரசியல் அமைப்பின்படி குற்றம்:
கேரளாவில் ஓட்டு போடும் ஒரு வாக்காளர் மீண்டும் கோவையில் வந்து ஓட்டு போட்டால் கண்டுபிடிப்பது சிரமம். வாக்காளர் பட்டியல், இனம், மொழி அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. ஆனால், ஒருவர் இரண்டு வாக்குரிமை பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்பு படி குற்றம்.
மக்களே சிந்தியுங்கள்:
அதனை தனி மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனைகட்டி, வாளையார் போன்ற எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள ஓட்டுச்சாவடிகளில் இரட்டை வாக்குரிமை பயன்படுத்துவோரை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.