அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தள தேர்தல் பிரச்சாரங்கள் கண்காணிக்கப்படும்: ராஜேஷ் லக்கானி
கோவை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தள தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
கோவையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதன்படி ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குசாவடி அமைப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு என்று தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தமிழகத்தில் 20 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
கடந்த தேர்தலில் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் விவரம், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தலில் செலவு கணக்கு காட்டாதவர்கள் மீது தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களின் வழியாக மேற்கொள்ளும் பிரச்சாரங்களும் கண்காணிக்கப்படும் என்றார்.