தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்: ராமதாஸ்
தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் மட்டுமே நேர்மையான தேர்தல் சாத்தியம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே இனி இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் கோரிக்கை
மேலும் அந்த அறிக்கையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், விதிகளை வகுக்கும் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சுதந்திரமான செயல்பாடு
அது மட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்குபவர்கள் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை; தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது; பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் தரப்படுகிறது; இதனால் தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமாகவும் செயல்பட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லாத தேர்தல்
தேர்தலில் நடக்கும் மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தான். இத்தகைய முறைகேடுகளின் முன்னோடி தமிழகம் தான். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ரூ.10,000 கோடி அளவுக்கும், தி.மு.க. ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன. விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும்.
ஜனநாயகம்... பணநாயகம்
இப்போது ஓட்டுக்கு பணம் தரப்படுவதை தடுக்க முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில், கூறியதன் மூலம் கையாலாகாதத் தன்மையை தேர்தல் ஆணையம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும்.
கிடப்பில் உள்ள பரிந்துரைகள்
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக 1998ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளை மத்திய அரசு இன்று வரை கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், அதன்பின் நசீம்ஜைதி காலத்தில் அனுப்பப்பட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்னும் பரிசீலிக்காததும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயல் அல்ல.
தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை
ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுவதன் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதை உணர்ந்து தேவையான தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதுடன், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏற்ற தன்னாட்சி அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.