தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி: அல்லாடும் மாற்றுத்திறனாளிகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் மே 16ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவுக்காக 2 ஆயிரத்து 931 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தேர்தல் பணியாற்ற 14 ஆயிரத்து 643 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 267 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் முதல் கட்ட பயிற்சி இன்று தொடங்குகிறது. இதற்கான ஆணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் தேர்தல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலநீலிதநல்லூர் யூனியன், குலசேகரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியை உஷா சங்கரன்கோவில் தொகுதியில் இருந்தும், தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜான்சன் நாங்குநேரி தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் என தெரிந்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பணியை வேறு
ஆசிரியர்களுக்கு மாற்றி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதே போன்று பெண்கள், நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பலரும் தங்களது பணியை வேறு நபர்களுக்கு மாற்றி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனால் தேர்தல் பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பலர் புலம்பி வருகின்றனர்.