தேர்தல் ”மை” யின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
சென்னை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தேர்தலில் ஓட்டு போடுவது என்பது ஒரு தலையாய கடமை மட்டும் அல்லாமல் ஒரு தவம் போன்ற நிகழ்வாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது முடிந்து முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் வரும் 24 ஆம் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதற்கு காரணம் தான் 18 வயதை கடந்துவிட்டோம் என்ற எண்ணம், ஓட்டுப்போடும் உரிமை கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பங்கு போன்றவையே.
இதையும் தாண்டி ஒரு எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கதான் செய்கின்றது.
”மை” யின் வரலாறு:
அதுதான் ஓட்டுப்போட போகும்போது விரலில் வைக்கப்படும் அழிக்கமுடியாத மை. தேர்தலில் முதல்முறையாக ஓட்டுப்போட்டதற்கு அடையாளமாக தன் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை மற்றவர்களிடம் பெருமையுடன் காட்டிக்கொள்வதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருப்பது உண்மை.
கள்ள ஓட்டு கண்டுபிடிப்பு:
அந்த அழியாத மையின் பின்னால் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க அதாவது ஒருவரே பல ஓட்டுகளை போடுவதை தடுப்பதற்காக இந்த மை பயன்படுத்தப்படுகிறது.
அடையாள மை:
இந்த மையை பயன்படுத்தி ஒருமுறை விரலில் அடையாளமிடும் போது பல மாதங்களுக்கு அது அழியாமல் நீடித்திருக்கிறது. தேர்தலின் போது ஓட்டுப்போட வரும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரல் நகத்தில் இந்த மை அடையாளமாக இடப்படுகிறது.
கர்நாடகாவில் தயாரிப்பு:
தேர்தல் ஆணையம் தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கர்நாடகத்தை சேர்ந்த மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் இந்த மையை தயாரித்து வழங்குகிறது.
உரிமம் ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே:
இந்த மையை வினியோகிக்கும் அதிகாரம் இந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது. புது டெல்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் இந்த உரிமத்தை 1962 ஆம் ஆண்டு வழங்கியது.
மைசூர் பெயிண்ட் கம்பெனி:
இந்த நிறுவனம் 1937 ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜதானியின் மகாராஜாவாக இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் கம்பெனி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
மாற்றம் செய்யப்பட்ட பெயர்:
1989 இல் இந்த நிறுவனத்துக்கு தற்போதைய பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1962 இல் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநில பொது தேர்தலுக்கான மையை வழங்கி வருகிறது.
சில்வர் நைட்ரேட் கலவை:
இந்த மையில் சில்வர் நைட்ரேட் அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில் புற ஊதா வெளிச்சம்படும்போது அது தோலில் கறையை ஏற்படுத்துகிறது. வெளித்தோலின் செல்கள் மாறும்போதுதான் இந்த கறை நீங்குகிறது.
மாறும் விரல்:
கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து இந்த மை இடது ஆள்காட்டி விரலில் நகத்தின் உச்சியிலிருந்து முதல் தோலுடன் இணையும் அடிவரை கோடுபோல் போடப்படுகிறது.
இரண்டு வாக்குக்கு நடுவிரல்:
அதற்கு முன் இந்த மை நகமும், தோலும் சேருமிடத்தில் இடப்பட்டது. இரு முறை வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது இந்த மை வாக்காளரின் இடது கை நடு விரலில் போடப்படுகிறது.
கிட்டதட்ட 2 லட்சம் டப்பாக்கள்:
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலுக்கு மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் 10 மில்லி அளவிலான சுமார் 20 லட்சம் மை டப்பாக்களை வழங்கியது. இதில் அதிக அளவில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 2.88 லட்சம் மை டப்பாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.