ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...? நிர்வாகிகளுடன் 4 நாட்கள் ஓ.பி.எஸ்.ஆலோசனை
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீவிர ஆலோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை 14-ம் தேதி தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதால், அது தொடர்பான விவாதம் அடுத்தவாரம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு பிறகு தொடங்கும் துறை ரீதியான மானியக்கோரிக்கை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு மேல் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் நடுவிலோ அல்லது பிற்பகுதியியோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை தொடங்கிவிட்டது அதிமுக.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பனீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் வரும் வியாழக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய பகுதிக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள். அந்த ஆலோசனையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கூட்டணி கணக்குகள் பற்றி கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது என தீர்மானித்துள்ளார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது போல், இப்போது அதிமுகவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிறகு மாலை 4.30 மணி முதல் 10 மணி வரையும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியில் எந்த கட்சியை வைத்துக்கொள்வது, யாரை புதிதாக சேர்ப்பது, நீக்குவது என்பது பற்றியெல்லாம் கருத்து கேட்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது.