பிரதமர் மோடி பெயரில் ஈரோட்டில் பல லட்சம் மோசடி செய்த பெண்கள்: போலீசில் பாஜகவினர் புகார்
ஈரோடு: நரேந்திர மோடி பெயரில் ஈரோட்டில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறிதது ஈரோடு பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
சென்னை, வில்லிவாக்கம் இரண்டாவது தெரு, எண், 44.ஏ ராஜமங்கலம் என்ற முகவரியை தலைமை இடமாக கொண்டு, ஆட்வின் பெண்கள் சங்கம் என்ற அமைப்பு பெண்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறப்படுகின்றது. ஈரோடு நேருவீதி டி.வி. காம்ப்ளக்சில், இதன் கிளை செயல்பட்டு வருகின்றது.
இது இந்திய முன்னேற்ற மோடி பேரவையின் சகோதர அமைப்பு. பெண்கள் செய்யும் தொழிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மூலம் கடன் பெற்று தருவதாக கூறி வருகின்றனர். ரூ 50,000 கடன் பெற 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஒரு லட்சம் கடன் வேண்டுவோர் ரூ 1,000 ரூயாய் செலுத்த வேண்டும் எனவும் கூறி வசூல் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த அமைப்பினர் மோடி பெயரில் வசூல் செய்யும் பணத்திற்கு உரிய ரசீது தருவதில்லை. ஒரு மாதத்தில் கடன் பெற்று தருவதாக கூறி பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம், பவானி, சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் ஏராளமான பெண்களிடம், ஏராளமான தொகை வசூலித்துள்ளனர்.
எனவே, மோடி பெயரை தவறாக பயன்படுத்தி ஏழை பெண்களிடம் பணம் பறிப்பதோடு மட்டுமல்லாமல் பிரதமரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகவும் இது உள்ளது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி. இது குறித்து விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.