"வாரணம் ஆயிரம்".. கூகுள் மேப்பின் உதவியுடன்.. 55 வருடங்கள் கழித்து.. கல்லறையில் பொங்கி வழிந்த பாசம்
55 வருடங்கள் கழித்து தன் அப்பாவின் கல்லறையை தேடி கண்டுபிடித்துள்ளார் மகன்
தென்காசி: 55 வருடங்களுக்கு பிறகு, தன் அப்பாவின் கல்லறையை தேடி கண்டுபிடித்துள்ளார் அவரது பாசமிகு மகன்.. இந்த சம்பவம்தான் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன்.. 56 வயதாகிறது.. இவரது அப்பா பெயர் பூங்குன்றன் என்ற ராம சுந்தரம்... அம்மா பெயர் ராதாபாய்.
ராமசுந்தரம் மலேசியா நாட்டில் ஆசிரியராக வேலைபார்த்தார்... கடந்த 1967-ம் ஆண்டு உடம்பு சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார்..
அடக்கம்
அந்த சமயம்தான் திருமாறன் பிறந்திருந்தார்.. அப்பா இறக்கும்போது இவருக்கு வெறும் 6 மாசம்தான் ஆகியிருந்தது.. இதனால் ராமசுந்தரம் சடலத்தை, மலேசியாவிலேயே அடக்கம் செய்தார் மனைவி ராதாபாய்.. அதற்கு பிறகு அங்கிருக்க பிடிக்காமல், மகனையும் அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்... இந்தியாவுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ராதாபாயும் உடல்நலம் குன்றி இறந்து விட்டார்... இதனால் திருமாறனுக்கு உறவு என்று யாருமே இல்லாமல் போய்விட்டார்கள்.
தனிமரமானார்
அப்பா, அம்மா, உறவினர்கள் என யாருமே இல்லாத தனிமரமானார். எனினும் அவர் சோர்ந்து போய்விடவில்லை.. நிறைய சமூக பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கினார்.. தன்னை போலவே யாரும் அனாதையாகிவிடக்கூடாது என்று நினைத்து, ஒரு அனாதை ஆசிரமத்தை சொந்தமாகவே தொடங்கி நடத்தினார்.. மிகச்சிறந்த முறையில், அங்குள்ளவர்களை பராமரித்து வந்தார்... ஆதரவற்ற இளம்பெண்கள், ஆண்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது என முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்..
கல்லறை
இதனால், தன் சொந்த வாழ்க்கையின் துயரத்தையும் மறந்தார் திருமாறன்.. ஆனாலும், இவருக்கு அடிக்கடி தன் அப்பா பற்றின நினைவுகள் வந்து கொண்டே இருந்தது... பிஞ்சு குழந்தையாக இருக்கும்போதே அப்பாவை பறிகொடுத்த நிலையில், அவரது கல்லறைக்காவது ஒருநாள் சென்று அஞ்சலி செலுத்த நினைத்தார்.. இதற்காகவே மலேசியா கிளம்பி செல்ல முடிவு செய்தார்.. ஆனால், மலேசியாவில் அவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்த இடம், தற்போது டோட்டலாக மாறி போயிருக்குமே, எப்படி வீட்டை கண்டுபிடிப்பது என யோசித்தார் திருமாறன்..
கூகுள் மேப்
பிறகு, கூகுள் மேப்பில் தேடி அந்த இடத்தை ஒருவழியாக கண்டுபிடித்தார்.. ஆனால், கல்லறை எங்கே என்று தெரியவில்லை.. அம்மாவும் இறந்துவிட்டதால், அப்பாவை எங்கே அடக்கம் செய்தார் என்பதை யாரிடம் கேட்பது என விழித்துள்ளார்.. பிறகு, தன்னுடைய அப்பா, மலேசியாவில் ஆசிரியராக இருந்தபோது அவரிடம் படித்த மாணவர்கள் யார் யார் என்ற விபரத்தையும் திரட்டினார் திருமாறன்.,..
டீடெயில்ஸ்
அப்போது, மோகனராவ், நாகப்பன் என்ற 2 பேரின் விபரங்கள் மட்டும் கிடைத்தன.. அவர்கள் மூலம் தன்னுடைய அப்பாவின் கல்லறையை கண்டுபிடித்தார்.. மலேசியாவின் கெர்லிங் பகுதியில் அந்த கல்லறை இருக்கிறதாம்.. இவ்வளவு தகவல்களையும் திரட்டிக் கொண்டு, மலேசியாவுக்கு கடந்த 8-ந் தேதி கிளம்பி சென்றார்.. அதாவது 55 வருடங்களுக்கு பிறகு, மலேசியா சென்றதுடன், அப்பாவின் கல்லறையையும் தேடி கண்டுபிடித்துவிட்டார்..
மெழுகுவர்த்தி
இதற்கு தன் அப்பாவிடம் படித்த அந்த மாணவர்கள்தான் உதவி செய்தனர்.. ஏதோ ஒரு புதருக்குள் அந்த கல்லறை அமுங்கி கிடந்துள்ளது.. அந்த கல்லறையில், தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் இருந்ததை பார்த்து கதறி கதறி அழுதார்.. மெழுகுவர்த்திகளை கல்லறையில் ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.. அந்த கல்லறை முன்பாக நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.. கடைசியில், அப்பாவின் கனத்த நினைவுகளை தாங்கியபடி நெல்லை வந்து சேர்ந்துவிட்டார் பாசத்திருமகன் திருமாறன்..!!