சென்னையை புரட்டிப் போட்டது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டும் தானா?
சென்னை: சென்னையின் வரலாறு காணாத வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது மட்டுமே காரணமா? இதில் அரசு உரிய அக்கறை காட்டப்படவில்லையா? என பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
900 கன அடிநீர்
நவம்பர் மாத இறுதியில் பெய்த மழையால் ஏரியில் இருந்து 900 கன அடிநீர் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. டிசம்பர் 1-ந் தேதியன்று இந்த உபரிநீர் அளவானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
29 ஆயிரம் கன அடி நீர்
அதுவும் ஒரே நாளில் 3,500, 5,000, 7,500 என அதிகரிக்கப்பட்டு 29 ஆயிரம் கன அடிநீர் வரை வெளியேற்றப்பட்டது. இப்படி படிப்படியாக உபரி நீர் வெளியேற்றம் குறித்த அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பாக வெளியிட்டிருந்தார்.
கேள்விகள்
ஆனால் அடையாறு ஆற்று இத்தகைய கன அடி நீரை தாங்குமா? அடையாறு ஆற்றின் கரைகளில் எந்த பகுதிவரை வெள்ளம் பாயும்? என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பதுதான் இப்போது எழுப்பப்படுகிற கேள்வி.
80,000 கன அடி பாய்ந்தது?
அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டாலும் அதை அடையாறு தாங்கும்... ஆனால் அடையாறு ஆற்றை ஒட்டிய ஏரிகளும் நிரம்பி அவற்றின் உபரிநீரும் அடையாறு ஆற்றில் கலந்தன; அதேபோல் மழை வெள்ள நீரும் அடையாற்றில் கலந்தன... இப்படி மொத்தமாக சுமார் 80,000 கன அடிநீர் அடையாற்றில் ஓடியதாலே அது சென்னையின் பல பகுதிகளை வெள்ளத்தால் மூழ்கடித்து அண்ணாசாலை வரை ஓடியது என கூறப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நீரை மட்டும் அரசு கணக்கிட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதா? அடையாறு ஆற்றில் கலந்த ஏரிகளின் உபரிநீரை அரசு எதிர்பார்க்கவில்லையா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன என்பதுபோன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.