ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்த என்ஜீனியர் கைது
நெல்லை: நெல்லை அருகே ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்ற என்ஜீனியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். காக்கி பேண்ட், டி சார்ட் அணிந்திருந்த அவர் நிதி நிறுவன உரி்மையாளரிடம் தான் ஐபிஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராதாபுரம் பகுதியில் உள்ள சில நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இங்கு பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த வந்துள்ளேன். உங்கள் நிறுவனத்தின் மீது மோசடி எதுவும் நடக்கவிலலை என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உரிமையாளர் ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தன்னை போலீசில் மாட்டி விட யூகித்த அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். மேலும் ராதாபுரம் காவல் நிலையத்துக்கு சென்று விட்டு மாலையில் வருகிறேன் என்று கூறி விட்டு வெளியில் செல்ல முயன்றார். அதற்குள் ராதாபுரம் இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் தன் பெயர் சந்திரபோஸ், தந்தை பெயர் கணபதி என்றும் சொந்த ஊர் தெற்கு கருங்குளம் என்றும் தெரிவித்தார். பிஇ படித்துள்ள இவர் வேலை கிடைக்காததால் இது போன்ற மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், படிக்கும் போதே போலீஸ் வேலையில் சேரப்போவதாக கூறியுள்ளார். ஐபிஎஸ் தேர்வு எழுத போவதாக கூறிய அவர் மகராஷ்டிராவுக்கு சென்றுள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவர் ஐபிஎஸ் தேர்வு எழுதி பயிற்சி முடித்து விட்டதாக அனைவரிடமும் கூறியுள்ளார்.
அங்கிருந்து வரும்போதே போலீஸ் அதிகாரி போல் உடை, கூலிங்கிளாஸ் அணிந்து வந்து்ள்ளார். தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறிய அவர் தன்னை யாராவது எதிர்த்தால் சுட்டு கொன்று விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சந்திரபோஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது மீண்டும் மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.