ஐடி நாடகத்திற்கு ஏற்பாடு செய்ததோடு தப்பிக்க வைத்ததும் 'மேடி' தான்... பிரபாகரன் பரபர வாக்குமூலம்!
ஜெ. தீபா வீட்டில் ஐடி நாடகத்தை நடத்தியது அவருடைய கணவர் மாதவன் தான் என்று போலீசில் சரணடைந்த பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் ஐடி நாடகத்தை நடத்தியது மாதவன் தான் என்று போலீசில் சரணடைந்த போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் கூறியுள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி மாதவன் வரவழைத்து ஏமாற்றியதாகவும், தப்பிக்கவும் மாதவனே ஏற்பாடு செய்ததாகவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று காலை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா வீட்டில் வருமான வரி சோதனை என்று செய்திகள் பரவின. தீபா வீட்டில் இல்லாத நிலையில் வந்த வருமான வரி அதிகாரி அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனையடுத்து போலீசார், தீபாவின் வழக்கறிஞர்கள் தி. நகர் வீட்டிற்கு பறக்க பதற்றமான போலி அதிகாரி தப்பியோடினார்
போலீஸார், மீடியாக்களின் சேஸிங் செய்தும் தப்பியோடிய போலி அதிகாரியை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று தப்பியோடிய போலி அதிகாரி மித்தேஷ்குமார் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது : என்னுடைய பெயர் பிரபாகரன் நான் விழுப்புரத்தில் இருக்கிறேன். எம்பிஏ பட்டதாரி சொந்தமாக ஓட்டல் தொழில் நடத்தி வருகிறேன்.
4 மாதத்திற்கு முன்னர் மாதவன் என்னுடைய கடைக்கு சாப்பிட வந்தார். முதலில் அவரை அடையாளம் தெரியவில்லை பின்னர் அடையாளம் கண்டு விருந்து உபசரித்தோம். என்னைப் பார்த்து மாதவன் நீங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அந்த ஆசை இல்லை என்று மறுத்துவிட்டேன்.
வலியபோய் நடிப்பு ஆசை தூண்டிய மாதவன்
இதனால் மாதவன் நடிக்கும் ஆசை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்றார். வீட்டில் ஏற்கனவே நான் சினிமாவில் நடிக்கப் போவதாக சொன்ன போது எதிர்த்ததால் நான் இதனை வீட்டாரிடம் தெரிவிக்கவில்லை. 2 மாதத்திற்கு முன்னர் ஓட்டலுக்கு வந்த மாதவன், நடிப்பது குறித்து கேட்டேனே என்று சொல்லி புகைப்படம் கேட்டார் நானும் என்னிடம் இருந்த ஒரு புகைப்படத்தை கொடுத்தேன். அதன் பிறகு 15 நாட்களுக்கு முன்னர் எனக்கு தொலைபேசியில் பேசினார். வாட்ஸ் அப்பில் தான் பேசுவார், எனக்கு ஒரு கூரியர் அனுப்பி இருப்பதாகவும் அதில் இருக்கும் அடையாள அட்டை, சர்ச் வாரண்டை எடுத்துக் கொண்டு வருமான வரி அதிகாரியாக நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
வீட்டுக்கு வரச்சொன்னார்
10ம் தேதி காலையில் சென்னைக்கு நான் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வருகிறேன் என்று சொன்னேன். அப்போது காலையிலேயே வீட்டிற்கு வருமாறு கூறினார். இதனால் சனிக்கிழமை காலையில் தி.நகர் வீட்டுக்குப் போய் மாதவனுக்கு வாட்ஸ் அப்பில் கால் செய்தேன். செக்யூரிட்டியிடம் வருமான வரி அதிகாரி என்று சொல்லிவிட்டு வரச்சொன்னார்.
மாதவன் கொடுத்த சர்ச் வாரண்ட்
நான் உள்ளே போகும்போது வெளியே ஒரு கார் போனது, அது தீபாவாகத்தான் இருக்கும் என நினைத்தேன். எனக்கு சந்தேகம் வந்ததால் மாதவனிடம் கேட்டதற்கு நிச்சயமாக படப்பிடிப்பு தான் உங்கள் திறமையை சோதிக்கிறேன் என்றார். உடனே என்னிடம் ஒரு சர்ச் வாரண்ட்டை காட்டினார்.
தீபாவிடம் மிரட்டச் சொன்னார்
பின்னர் மாதவனே தீபாவிற்கு போன் செய்து வருமான வரி அதிகாரி வந்திருக்கிறார், சோதனை நடத்த வேண்டும் என்று சொன்னார். என்னிடமும் தொலைபேசியை கொடுத்து தீபாவை மிரட்டச் சொன்னார். 15 நிமிடத்தில் வரச்சொல்லி தீபாவிடம் பேசினேன், அவர் வரும் வரை வீட்டில் இருந்த புகைப்படங்களை காட்டி சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார்.
தப்பிக்க வைத்தது மாதவனே
திடீரென தீபாவின் வழக்கறிஞர் மற்றும் போலீசார், மீடியா வந்தனர். இதனால் நான் பதற்றமடைந்தேன், மாதவனிடம் கேட்டதற்கு சுவர் பக்கத்தில் ஒரு சேர் போட்டிருக்கிறேன் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தப்பித்து ஓடிவிடுமாறு கூறினார். இதனை கேட்டு நானும் யாரும் பார்க்காத நேரமாக பார்த்து தப்பித்து ஓடினேன்.
என்னை வைத்து பணம் பறிக்க திட்டம்
வரும் வழியிலேயே ஐடி கார்டு, சர்ச் வாரண்ட் அனைத்தையும் கிழித்து போட்டுவிட்டேன். வீட்டுக்கு போய் டிவி பார்த்தபோது உண்மையை மறைக்க முடியவில்லை என்பதால் போலீசில் சரணடைந்தேன். குற்றஉணர்ச்சி இருந்தது, மாதவன் என்னை வைத்து தீபாவிடம் பணம் பறிக்க சதித்திட்டம் போட்டது அப்போது தான் எனக்கு தெரிந்தது என்றும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.