என் மகன் சுபாஷ் உயிரோடு திரும்ப வருவான்... நம்பிக்கையோடு பேசும் தந்தை
சென்னை: என் மகன் உயிருடன்தான் இருப்பார், அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையிருக்கிறது என்று கடலில் விழுந்த டோர்னியர் விமானத்தில் சென்ற துணை விமானி சுபாஷின் தந்தை சுரேஷ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த ஜூன் 8ம்தேதி ஆபரேசன் ஆம்லாவிற்காக நாகப்பட்டினம் வரை ரோந்து சென்று விட்டு திரும்பிய டோர்னியர் விமானம் சிதம்பரம் அருகே மாயமானது. இந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகியோர் சென்றனர்.
மாயமான விமானம் சிதம்பரம் அருகே கடலில் விழுந்ததாக கூறப்பட்டதால் கடந்த ஒரு மாதகாலமாக ஹெலிகாப்டர்கள், அதிநவீன கப்பல்களைப் பயன்படுத்தி கடலுக்கு அடியில் ஸ்கேன் செய்து தேடி வந்தனர்.ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து விமானத்தில் பயணித்த விமானிகளின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். எனினும் மூவரும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையோடு கூறியதோடு, விமானத்தை கண்டுபிடிக்க கடிதம் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், பிச்சாவரத்துக்கு கிழக்கே கடலுக்கு அடியில் அந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமானத்தில் பயணித்த செய்த 3 பேரின் நிலை என்ன என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.
விமானம் கண்டு பிடிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய துணை விமானி சுபாஷின் தந்தை சுரேஷ், விமானம் மாயமாகி 32 நாட்களாக கடலோர காவல்படை தேடிய போது எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது விமானத்தின் பாகங்கள் கிடைத்து இருப்பதாக வரும் தகவல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
நீச்சல் தெரியும்
விமானம் உடைந்து விழுந்ததால் 3 பேரும் தப்பி இருப்பார்கள். எனது மகனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் உயிருடன் இருப்பார். அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் இறைவனை வழிபட்டு வருகிறோம். உறுதியாக எனது மகன் வீட்டுக்கு வருவார் என்று சுரேஷ் கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவாகவே தனது மகனுக்கு சுபாஷ் என்று பெயர் வைத்ததாக கூறியுள்ளார் விமானியின் தந்தை சுரேஷ். என் மகனும் நாட்டிற்கு சேவை செய்யும் பணியில் இணைந்ததற்காக மகிழ்ச்சியடைந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலமாக மாயமான சுபாஷை எண்ணி கவலையில் ஆழ்ந்திருந்த பெற்றோர், குடும்பத்தினருக்கு சுபாஷின் நண்பர்கள்தான் ஆறுதலாக இருக்கின்றனர். மகனுக்கு எதுவும் நேர்ந்திருக்காது என்று நம்பிக்கையோடு கூறும் பெற்றோருக்காகவாவது சுபாஷ் திரும்ப வரவேண்டும் என்பது நண்பர்களின் பிரார்த்தனையாகும்.