நாகையில் விடாது வெளுக்கும் மழை... மூழ்கிய வயல்கள்- தீவான கிராமங்கள்
நாகை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களாக மழை கொட்டி வருவதால் பல லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழை காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. 6-வது நாளாக கொட்டித் தீர்த்த மழையால் இம் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாவே நாகை மாவட்டத்தில் மழை விடாது வெளுத்து வாங்குகிறது. இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சீர்காழியில் 31 செமீ மழை பாதிவானது.
நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. வெள்ளிக்கிழமை காலையில் இருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 27 செ.மீ மழை பதிவானது. திருப்பூண்டியில் 24 செ.மீ, வேதாரண்யத்தில் 16 செ.மீ., மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வயல்களில் தேங்கிய தண்ணீர்
நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. மழை வெள்ளம் காரணமாக மயிலாடுதுறை அருகே பாலூர் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்த மழைநீர் 300 ஏக்கர் சம்பா வயல்களில் புகுந்து பயிரை மூழ்கடித்தது. பயிர்கள் அழுகிவிடுமோ என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கிராம மக்கள் தவிப்பு
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே அரிச்சந்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வண்டல், குண்டுரான்வெளி ஆகிய கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் தனி தீவுகளாக மாறின. முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படுகின்றன.
முகாம்களில் தங்கவைப்பு
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள திருநகரி வாய்க்கால் நேற்று உடைந்தது. இந்த தண்ணீர் அண்ணா நகர், ரயிலடி, விளக்குமுக தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து, இப்பகுதியில் குடியிருந்த சுமார் 60 பேர் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த நீர்
செம்பனார்கோவில் அருகே தரங்கம்பாடி தாலுகா தலச்சங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் வாய்க்கால், கல்லடி வாய்க்கால் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வடக்குத்தெரு, தெற்குதெரு பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் தலச்சங்காட்டில் 500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
உயிரிழப்பு சேதம்
மழையால் நாகை மாவட்டத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஆண்டு வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சாகுபடி செய்த பயிர்கள் அழுகிவிடுமோ என்பது விவசாயிகளின் அச்சமாகும்.