இந்தியக் கடலோர பாதுகாப்பில் இணைந்தது நவீன அதிவேக ரோந்து கப்பல் ‘அபிராஜ்’
தூத்துக்குடி: இந்திய கடலோர பாதுகாப்பில் புதிய அதிவேக ரோந்து கப்பல் அபிராஜ் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மன்னார்வளைகுடா பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடலோர காவல்படை கட்டுபாட்டில் மன்னார்வளைகுடா கடல் பகுதி உள்ளது. அங்கு ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே வைபவ், ஆதேஷ் என்ற இரண்டு ரோந்து கப்பல்கள் உள்ளன.
சமீப காலமாக தூத்துக்குடி கடல் வழியாக கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வந்ததால் அதனை தடுக்க மேலும் ஒரு புதிய அதிநவீன ஆயுதம் தாங்கிய ரோந்து கப்பலான ஐசிஜிஎஸ் அபிராஜ் கடலோர காவல் புதிதாக இணைக்கப்பட்டது.
பெயர்ப்பலகை...
தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுகத்தில் இந்திய கப்ப\ற்படையின் தென்னிந்திய தளபதி சுரேந்திர பால்சிங் சீமா தேசிய கொடி ஏற்றி அபிராஜ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
வேகம்...
இந்த அபிராஜ் ரோந்து கப்பல் கொச்சி துறைமுகத்தில் வடிவமைக்கப்பட்டது. 50 மீட்டர் நீளம் உடையது. 33 கடல் மைல் வேகத்தில் செல்ல கூடியது.
அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள்...
இதில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளன. கப்பல் கேப்டனாக அசோக்குமார், மற்றும் 5 அதிகாரிகள், 34 சிப்பாய்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் பாதுகாப்பு...
இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முறைப்படி இணைக்கப்பட்டதால் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்வளைகுடா பகுதி பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரின பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.