வருமான வரித்துறை புகார் - தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு- கைதாக வாய்ப்பு
வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பெண் ஊழியரை மிரட்டியதாகவும் வருமான வரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரின் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.
மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் நுழைந்து சோதனைக்கு இடையூறு செய்தனர். இதனால் வருமான வரித்துறையினர் சோதனையை நிறுத்தி விட்டு அவர்களை வெளியேற கூறினர்.
அப்போது சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த தளவாய் சுந்தரம், அவற்றை விஜய பாஸ்கர் வீட்டில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்தார். அதை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். அந்த ஆவணத்தை அவரிடம் இருந்து வாங்குவதற்குள், அருகேயிருந்த விஜய பாஸ்கரின் கார் ஓட்டுநர் உதயக்குமார் அந்த ஆவணத்தை அவரிடம் பிடுங்கிக்கொண்டு ஓடிச் சென்று மதில் சுவருக்கு வெளியே வீசினார். வெளியில் இருந்த விஜய பாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர், அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை மத்திய போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
ஆவணங்கள் சிக்கின
அப்போது திடீரென வீட்டிற்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களை சந்திப்பதற்காக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டினார். எனினும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம் தொடர்பான ஆவணமும் அடங்கும்.
அமைச்சர்கள் இடையூறு
இதேபோல சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது அங்கு வந்த கடம்பூர் ராஜூ பிரச்சினை செய்தார். பாதுகாப்பை மீறி உள்ளே சென்று அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தார். இதனால் பதற்றமும் அதிகரித்தது. பெண் அதிகாரியை மிரட்டியதோடு ஆபாசமாக பேசியதாகவும் புகார் எழுந்தது.
அமைச்சர்கள் மீது புகார்
இந்நிலையில், அமைச்சரின் வீட்டில் நடந்த சோதனையின்போது பெண் அதிகாரி மிரட்டப்பட்டதாக வருமான வரித்துறை குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு புகார் அளித்தது.
வருமான வரித்துறை புகார்
காவல்துறை ஆணையர் கரண்சின்காவிற்கு அளித்த புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, போலீஸ் பாதுகாப்பை மீறி தமிழக அமைச்சர்கள் வீட்டுக்குள் நுழைந்து எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை மிரட்டினர். ஆதாரங்களை அளிக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.
பெண் அதிகாரிக்கு மிரட்டல்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்ட பெண் அதிகாரி உட்பட அனைவரையும் மிரட்டினர். வருமான வரித்துறை சோதனை நடக்கும் இடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது. ஆனால் அத்துமீறி நுழைந்த இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரண்சின்ஹா உத்தரவு
இந்த புகாரின் அடிப்படையில் புகாருக்கு உள்ளான அமைச்சர்களை விசாரணை நடத்த சென்னை காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். சென்னை தெற்கு காவல்துறை ஆணையர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். விசாரணை நடத்திய பின்னர் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா ஆணையிட்டார்.
வழக்குப் பதிவு
இதனையடுத்து அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, காமராஜ், மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களின் மீது நான்கு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.