பயங்கர தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் பகுதி அபாயகரமானது... தீயணைப்புத்துறை பகீர் அறிவிப்பு
தி.நகரில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடை பகுதிகள் தீவிபத்து காரணமாக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தி.நகரில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் , ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடைப் பகுதிகள், தீவிபத்து காரணமாக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராயர் நகர் சென்னை சில்க்ஸ் கடைகளில் உள்ளே இன்று அதிகாலை முதலே தீ பற்றி எரிந்து புகை வெளியேறுவதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அதிகாலை வேளையில் அடுத்தடுத்து கடைகளில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஏராளாமான பொருட்கள் எரிந்து நாசமாகின. கட்டடம் முழுக்க புகை சூழ்ந்துள்ளதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாத சூழல் நிலவுகிறது.
தி.நகர், சைதாப்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் வந்த 70 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சில்க்ஸ் கடையில் 7 வது மாடியில் இருந்து அக்கடை ஊழியர்கள் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சென்னை சில்க்ஸ் கடைகள் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என்று தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.
கடையின் கீழ்தளத்தில் தீ பற்றியுள்ளதால் புகை மண்டலமாக அந்தப் பகுதி காட்சியளிக்கிறது. தீயணைப்புத் துறை 'லேடர்' மூலமாக கடைகளின் உள்ளே இருந்து ஆட்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.