சேலத்தில் இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் பயங்கர தீ: கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் நாசம்
சேலம்: சேலத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் எதிரே உள்ள 3 மாடி கட்டிடத்தில் 3வது மாடியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தான் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்தியன் வங்கியின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகத்தில் வங்கி கணக்குகள் தணிக்கை செய்யப்படும். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் அடித்தது. மேலும் கணினிகள் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டது. அப்போது 2வது மாடியில் உள்ள பங்கு வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது வங்கி அலுவலகம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இநத் விபத்தில் வங்கி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.