சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஐசியு பிரிவில் தீ: காசநோயாளி பலி
சென்னை: சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காச நோயாளி ஒருவர் மூச்சு திணறி பலியாகியுள்ளார்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 18 நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வேறு தளத்திற்கு மாற்றப்பட்டனர். அதில் 4 பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது.

திண்டிவனத்தைச் சேர்ந்த காசநோயாளியான பாண்டுரங்கன்(34) என்பவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தும்போது தான் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமலும், புகையால் மூச்சுத் திணறியும் அவர் பலியானார்.
சிறிய அளவிலான தீ விபத்து என்பதால் மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மின்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டது தான் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
மின்கசிவு ஏற்பட்டதால் புகை மட்டுமே ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு கருதி நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications